ஊழலை எதிர்த்ததால் பழி வாங்குவதா? தருமபுரி ஆட்சியரை இடமாற்றம் செய்க: அன்புமணி

மாவட்ட ஆட்சியராக இருப்பவர் அம்மாவட்டத்தின் வளர்ச்சிக்கு வழிகோல வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தருமபுரி மாவட்ட ஆட்சியர் அம்மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதால் அவரை உடனடியாக இடமாற்றம் செய்து நேர்மையான அதிகாரி ஒருவரை புதிய ஆட்சியராக அரசு நியமிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் கூடுதல் நேரம் பெற்று தேர்வு எழுதிய மாற்றுத்திறன் மாணவிக்கு மருத்துவ ஆய்வு என்ற பெயரில் மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் தொல்லை கொடுத்திருக்கிறார். பொதுத்தேர்வு நேரத்தில் மாணவியை தேவையற்ற மன உளைச்சலுக்கு உள்ளாக்கிய தருமபுரி மாவட்ட ஆட்சியர் விவேகானந்தனின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.

Anbumani ramadoss urges transfer to Dharmapuri Collector

இலக்கியம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி சங்கமப் பிரியாவின் வலது கையில் நரம்பு பிரச்சினை இருப்பதால் அவரால் எழுதமுடியவில்லை. இதனால் இடது கையால் எழுதி வருகிறார். வலது கையால் எழுதும் வேகத்திற்கு இடது கையால் எழுதமுடியாது என்பதாலும், வலது கையின் செயல்பாடு 40% பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி என்பதாலும் தேர்வை முழுமையாக எழுதி முடிக்க அரசுத் தேர்வுத்துறைக்கு விண்ணப்பித்து ஒரு மணி கூடுதல் நேரம் வாங்கியிருக்கிறார்.

கடந்த 8-ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கிய நிலையில் மாணவி சங்கமப் பிரியா தேர்வு எழுதிய அறைக்கு சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள் சிலர் அவரிடம் விசாரணை என்ற பெயரில் அவரை தொல்லை செய்துள்ளனர். அவரை பல கோணங்களில் நிற்க வைத்து புகைப்படம் எடுத்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவியால் சரியாக தேர்வு எழுத முடியவில்லை.

அதன்பின் கடந்த 23-ஆம் தேதி சங்கமப்பிரியாவின் வீட்டிற்கு சென்ற அரசு மருத்துவக்கல்லூரி ஊழியர்கள் இருவர், 24-ஆம் தேதி விசாரணைக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வரும்படி சம்மன் வழங்கிச் சென்றுள்ளனர். இந்த அத்துமீறல்கள், கொடுமைகள் அனைத்துமே தருமபுரி மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் ஆணைப்படியே நடந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட மாணவி சங்கமப் பிரியா மாவட்டஆட்சியர் மீது சைல்டு ஹெல்ப்லைனில் புகார் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மாணவி சங்கமப் பிரியாவை ஆட்சியர் கொடுமைப்படுத்துவதன் பின்னணியில் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. சங்கமப் பிரியாவின் தாயார் மகேஸ்வரி தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி வருகிறார். தருமபுரி மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட சமச்சீர் கல்வி வளர்ச்சி நிதியில் ரூ.20 லட்சத்தை சில தனியார் புகைப்பட, வீடியோ நிறுவனங்களுக்கு வழங்கும்படி முதன்மைக் கல்வி அலுவலரை மாவட்ட ஆட்சியர் கட்டாயப்படுத்தியுள்ளார்.

ஆனால், அதற்கு மகேஸ்வரி மறுத்ததுடன் மாவட்ட ஆட்சியரின் ஊழலுக்கு எதிராகவும் பேசியதாக கூறப்படுகிறது. இதை மனதில் வைத்துக் கொண்டு மகேஸ்வரியை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே அவரது மகள் சங்கமப் பிரியாவுக்கு மாவட்ட ஆட்சியர் தொல்லை கொடுத்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.

மாற்றுத்திறன் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் 46 மாணவ, மாணவியர் கூடுதல் நேரம் பெற்றுள்ள நிலையில், சங்கமப் பிரியாவுக்கு மட்டும் ஆட்சியர் தொல்லை கொடுப்பதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்? ஊழலுக்கு உடன்பட மறுத்ததற்காகவும், ஊழலை எதிர்த்ததற்காகவும் ஓர் அதிகாரியின் மகளை கொடுமைப்படுத்தும் அளவுக்கு கீழ்த்தரமாக நடந்து கொள்பவரால் எப்படி நல்ல மாவட்ட ஆட்சியராக செயல்பட முடியும்?

தருமபுரி மாவட்ட ஆட்சியராக 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7-ம் தேதி விவேகானந்தன் பதவியேற்றார். வழக்கமாக மாவட்ட ஆட்சியர் போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்பட வேண்டும். ஆனால், விவேகானந்தன் 4 ஆண்டுகளுக்கு மேலாக தருமபுரி மாவட்ட ஆட்சியராக நீடிக்கிறார்.

தமிழகத்தில் ஒரே மாவட்டத்தில் நீண்டகாலமாக ஆட்சியராக நீடிக்கும் அதிகாரிகள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் இவர் தான். இதற்குக் காரணம் ஆட்சியில் உள்ள கட்சியின் அனைத்து நிர்வாகிகளுக்கும் எடுபிடி வேலைகளை செய்வதும், மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு கார் கதவை திறந்து விடுவதில் தொடங்கி அனைத்து வேலைகளையும் செய்வதுதான் என மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மாவட்ட ஆட்சியராக பதவியேற்றது முதல் ஊழலை மட்டுமே முழுநேரப் பணியாக இவர் மேற்கொண்டு வருகிறார். வளர்ச்சித் திட்டப் பணிகள் எதையும் இவர் மேற்கொள்ளவில்லை. ஆளுங்கட்சியினர் கோபித்துக் கொள்வார்கள் என்பதற்காக, தருமபுரி மக்களவை உறுப்பினர் என்ற முறையில் எனது தலைமையில் நடந்த மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டத்தில் இவர் பங்கேற்க மறுத்ததால் அக்கூட்டமே ரத்து செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றமே உத்தரவிட்டுள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்தில் ஏரியை ஆக்கிரமித்திருந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றி தூர்வாருவதற்கு எனது தலைமையில் பொதுமக்கள் முயன்றபோது, அதற்கு அனுமதி தர மறுத்து உயர் நீதிமன்றத்தில் கண்டனத்துக்கு ஆளானவர் என ஏராளமான குற்றச்சாட்டுகளை தருமபுரி மாவட்ட ஆட்சியர்விவேகானந்தன் மீது அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

மாவட்ட ஆட்சியராக இருப்பவர் அம்மாவட்டத்தின் வளர்ச்சிக்கு வழிகோல வேண்டும். மாறாக ஊழலில் திளைத்து மாவட்டத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைப் போடக் கூடாது. ஆனால், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அம்மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதால் அவரை உடனடியாக இடமாற்றம் செய்து நேர்மையான அதிகாரி ஒருவரை புதிய ஆட்சியராக அரசு நியமிக்க வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+