செக் போஸ்ட் எல்லாத்தையும் மூடிட்டாங்க.. பணம் பாய்கிறது.. அன்புமணி
சென்னை: தமிழகம் முழுவதும் சோதனைச் சாவடிகளை முழுமையாக மூடி வி்ட்டனர். இதனால் வாக்காளர்களுக்கு பணம் படு வேகமாக, தாராளமாக பாய்ந்து வருகிறது என்று பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பண வினியோகத்தை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட சோதனைச்சாவடிகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. வாக்குப்பதிவு முடிவடைவதற்கு முன்பாகவே சோதனைச் சாவடிகளை மூடியது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்திலுள்ள அனைத்து தொகுதிகளிலும் கடந்த ஒரு வாரமாகவே வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது. பண வினியோகத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு ஏராளமான புகார்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேர்தலுக்கு முதல் நாளான இன்று தான் பெருமளவில் பண வினியோகம் நடைபெறும். அதனால் இன்று தான் கண்காணிப்பு தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் அனைத்து சோதனைச் சாவடிகளும் இன்று செயல்படவில்லை.
எந்த சோதனைச் சாவடியிலும் ஆட்கள் இல்லை; அதிகாரிகளும் இல்லை. சோதனைச்சாவடி அலுவலகங்கள் மூடப்பட்ட நிலையில் இருக்க, அனைத்து வாகனங்களும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் செல்கின்றன. பென்னாகரத்திலிருந்து சென்னை வரும் வழியில் பல சோதனைச் சாவடிகள் திறந்து கிடந்ததை நானே நேரில் பார்த்தேன். தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் இதே நிலை தான் இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.
கடந்த தேர்தலின் போது வாக்குப்பதிவுக்கு இரு நாட்கள் முன்பாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சி தடையின்றி பண வினியோகம் செய்ய தேர்தல் ஆணையம் உதவி செய்தது. இந்த ஆண்டு சோதனைச் சாவடிகளை திறந்து வைத்து வாக்காளர்களுக்கு தருவதற்கான பணத்தை தடையின்றி கொண்டு செல்ல ஆணையம் உதவி செய்கிறது.
தமிழகத்தில் இந்த அளவுக்கு பண வினியோகம் நடைபெற்ற பிறகு தேர்தல் நியாயமாக நடைபெற வாய்ப்புக்கள் இல்லை. எனவே, தமிழக சட்டசபைத் தேர்தலை ஒத்தி வைத்து, நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்த பிறகு வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications