மரபணு மாற்ற கடுகு வகையை தடை செய்ய வேண்டும்: அன்புமணி கோரிக்கை
சென்னை: மரபணு மாற்றப்பட்ட கடுகு வகைக்கு, மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என, பா.ம.க., எம்.பி.,யும், அக்கட்சியின் இளைஞர் அணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதம்:
டெல்லி பல்கலை கழகத்தின் மரபணு பொறியியல் துறை விஞ்ஞானிகள், மரபணு மாற்றப்பட்ட கடுகு வகையை கண்டுபிடித்துள்ளனர். பொது மக்களின் பயன்பாட்டுக்கு, மரபணு மாற்றப்பட்ட கடுகு வகையை கொண்டு வர, மத்திய அரசிடம் அனுமதியும் கேட்டுள்ளனர்.

மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள், தானியங்களால் மனிதனுக்கும், மண்ணுக்கும் ஏற்படும் பாதிப்பு பற்றி மத்திய அரசின் கவனத்துக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. சில மாநிலங்களில், மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள் மற்றும் தானியங்களுக்கு தடையும் விதிக்கப்பட்டு உள்ளது.
எனவே, மரபணு மாற்றப்பட்ட கடுகு வகைக்கும் தடைவிதிக்க வேண்டும். அன்றாட உணவில், கடுகு, குறிப்பிட்ட அளவு சேர்க்கப்படுகிறது. நாட்டின் சில பகுதிகளில், கடுகில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எண்ணெய், சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. மரபணு மாற்றப்பட்ட கடுகு, மனித உடலுக்கு பெரும் கேட்டை விளைவிக்கும். அதை உற்பத்தி செய்யும் மண்ணும் பாழ்படும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications