முழுஅடைப்பு: வழக்கம் போல் ஓடும் ஆந்திரா பேருந்துகள்.. எல்லையிலேயே நிறுத்தப்பட்ட கேரளா பேருந்துகள்!
இன்று தமிழகத்தில் நடக்கும் முழு அடைப்புப் போராட்டத்தில், ஆந்திரா அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் தமிழகம் வருகின்றன. ஆனால் கேரளா பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்படுகின்றன.
சென்னை: விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய,மாநில அரசுகளை வலியுறுத்தி இன்று முழு அடைப்புப்போராட்டம் நடக்கிறது. வெளிமாநில போக்குவரத்தில், ஆந்திரா அரசு பேருந்துகள் எப்போதும் போல் தமிழகம் வந்துகொண்டிருக்கிறது. ஆனால் கேரளா பேருந்துகள் எல்லைகளில் நிறுத்தப்படுகின்றன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என பலவேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் 41 நாட்களாகப் போராட்டம் நடத்தினர்.
அந்த விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தவும் திமுக தலைமையில் அனைத்துக் கட்சிகளும் இன்று முழு அடைப்புப் போராட்டத்தை நடத்துகின்றன.
இந்த போராட்டத்துக்கு வணிகர் சங்க பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை ஆகிய அமைப்புகள் ஆதரவு தெரிவித்ததால் இன்று கடைகள் திறக்கப்படாது.
அதேபோல் முழு அடைப்பு என்பதால் வெளி மாநில போக்குவரத்து இயக்கப்படாது என்ற நிலையில், ஆந்திரா அரசு பேருந்துகள் வழக்கம்போல் தமிழகம் வருகின்றன. ஆனால் கேரளா அரசு பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்படுகின்றன.