நம்ப வைத்து காவு கொடுக்கப்பட்ட அனிதா!
Recommended Video

அனிதா...
வறுமையின் கோரத்துடன் போராடி மனமெல்லாம் மருத்துவர் கனவுகளை சுமந்து பிளஸ் டூவில் கல்வியின் உச்சத்தைத் தொட்டவர்!
நீட் எனும் நச்சரவம் நம்மைப் போன்ற ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி கனவுகளை காவு கொள்கிறதே என கலகம் எழுப்பி டெல்லிக்கு படையெடுத்தவர்!

மக்கள் மன்றத்தின் மனோநிலையை சிந்தித்து பார்க்காதவர்களால் திணிக்கப்பட்டது நீட் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை!
நீட் தேர்வை தடுத்து நிறுத்த வேண்டிய அரசாங்கம், ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க, ஊரை அடித்து உலையில் போட்ட சொத்துகளை பத்திரமாய் பதுக்கி வைக்க காவடி தூக்கினார்கள்..
கூவத்தூரிலும் புதுச்சேரியிலும் முகாம்கள் போட்டு மூக்கு முட்ட.... வயிறு புடைக்க... மனம் லயிக்க மல்லாந்து கிடந்தார்கள்!
டெல்லிக்கு போனார்கள்... தங்கினார்கள்.. கேட்டபோதெல்லாம் நிச்சயம் நீட் இருக்காது என நீட்டி முழங்கினார்கள்... அனிதாக்கள் நம்பிக்கையோடு காத்திருந்தனர் கனவு நிறைவேறும் என!
அப்போதெல்லாம் தெரியாமல் போனது அனிதாக்களுக்கு... நாசமாய் போன அதிகாரத்துக்காக அடித்துக் கொண்டு வேறு வேலைக்காகவே இவர்கள் டெல்லி தர்பாரில் மண்டியிட்டு கிடந்தார்கள் என..
நீதிமன்றத்துக்கு போய்விட்டோம்.. அவசர சட்டத்துக்காக டெல்லி செல்கிறோம்.. எல்லாமும் நல்லபடியாக நடக்கும் என மீண்டும் மீண்டும் கிளிப்பிள்ளை போலச் சொன்னார்கள்..
அனிதாக்கள் மீண்டும் மீண்டும் நம்பியே கிடந்தார்கள்.. ஒரு கட்டத்தில் அப்பாவி அனிதாக்களின் பிரதிநிதியாக அரியலூர் அனிதா என்கிற போராளியே டெல்லிக்கு பயணப்பட்டாள்... நாடே திரும்பிப் பார்த்தது... உலகமே உற்றுப் பார்த்தது அனிதாவை
மரமாய் கிடக்கும் மாணவர்கள் இப்படித்தான் கிளர்ந்தெழுவார்கள் என்பதற்கு கட்டியம் கூறியவளாய் டெல்லி நீதிமன்றப் படிக்கட்டுகளேறினாள்... ஆனால் நியாயம் கிடைக்கவில்லை.. சமூக நீதியின் தாயகமான தமிழகமே இருண்டு போனது..
எங்கிருந்தோ குரல் வந்தது.. நீட் அவசர சட்டத்துக்கு அனுமதி தருவோம் என... சட்டாம்பிள்ளைத்தனமாக பேசுகிறவர்கள் சப்தமாக பேசியதை நம்பி, கவலைப்படாதீர்கள் மாணவர்களே! நிச்சயம் நீட் கிடையாது.. நம்பிக்கையோடு இருங்கள் என மீண்டும் அனிதாக்களின் கனவுகளில் ஈரம் ஊற்றுவதைப் போல நடித்தார்கள்...
இப்போது எல்லாம் நாசமாகிப் போனது! அனிதா தன்னையே மாய்த்துக் கொண்டார்! ஆம் நம்ப வைத்து கழுத்தை அறுத்துவிட்டார்கள்!
மனசாட்சியற்றவர்களிடத்தில் மன்றாடிக் கொண்டிருக்க முடியாமல் ஆங்காங்கே வீதிகளுக்கு வந்துவிட்டார்கள் அதிகார போதையில் மக்களை மாக்களாக நினைத்தவர்களுக்கு எதிராக!
ஒன்றா இரண்டா... அத்தனை பிரச்சனைகளிலும் தமிழகத்தின் நலன்களை அடகு வைத்துவிட்டு பதவி பெற, அடித்த சொத்துகளை காப்பாற்றும் கவலையில் உள்ளனர் அவர்கள். அவர்களுக்கு என்ன கவலை!












Click it and Unblock the Notifications