தைரியம் இருந்தால் திருச்செந்தூர் வா.. ஆதவ் அர்ஜுனாவை ஒருமையில் பேசி அனிதா ராதாகிருஷ்ணன் சவால்
தூத்துக்குடி: ''ஆதவ் அர்ஜூனாவுக்கு தைரியம் மற்றும் திராணி இருந்தால் வில்லிவாக்கம் சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு திருச்செந்தூரில் வந்து போட்டி போடட்டும்'' என்று முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டசபை தொகுதியின் திமுக எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் சவால் விடுத்துள்ளார். இந்த வேளையில் ஆதவ் அர்ஜூனாவை அவர் ஒருமையில் பேசினார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவை வீழ்த்தி தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. கட்சியின் தலைவர் விஜய் முதல்வராகி உள்ளார். விஜய் உடன் 8 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். இதில் முக்கியமானவர் ஆதவ் அர்ஜூனா.

சென்னை வில்லிவாக்கம் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்ற ஆதவ் அர்ஜூனா பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
ஆதவ் அர்ஜூனாவுக்கு சவால்
இந்நிலையில் தான் முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் திமுக எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு ஒருமையில் பேசி சவால் விடுத்துள்ளார். தன்னை மீண்டும் வெற்றி பெற வைத்த தொகுதி மக்களுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்து வரும் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
திருச்செந்தூரில் போட்டியிட வரட்டும்
என்னை வெற்றி பெற வைப்பதற்காக வாக்களித்த இஸ்லாமியர் சகோதரர்கள், தலித் சகோதரர்கள், ஏனைய பெரியோர்கள் என அனைவரின் பொற்பாதங்களிலும் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்ள நான் கடமைப்பட்டுள்ளேன். இன்று எவர் எவரோ ஆட்சிக்கு வந்துவிட்டு எது எதையோ பேச வேண்டும் என்று நினைக்கிறார்கள். இன்னும் 4 மாதங்கள் மட்டும் தான் இந்த ஆட்சி இருக்கும் என்பதை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
ஆதவ் அர்ஜூனா என்று ஒருவர் இருக்கிறார். தைரியம், திராணி இருந்தால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதேபோல் நானும் என்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன். அதன்பிறகு திருச்செந்தூர் தொகுதியில் போட்டு பார்க்கலாம். இது எங்க ஊரு. இங்கு யாரையும் வீழ்த்திவிடுவோம்’’ என்றார்.
திருச்செந்தூர் பின்னணி
திருச்செந்தூர் சட்டசபை தொகுதியை எடுத்து கொண்டால் அது அனிதா ராதாகிருஷ்ணனின் கோட்டையாகும். கடந்த 2001 முதல் 2026 சட்டசபை தேர்தல் வரை மொத்தம் 7 முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். இதில் 2001ல் 2006ல் அதிமுகவில் வென்ற அனிதா ராதாகிருஷ்ணன் அதன்பிறகு 2009, 2011, 2016, 2021, 2026 என்று மொத்தம் 5 தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனால் தான் அவர் திருச்செந்தூர் தொகுதியில் வந்து போட்டியிடும்படி ஆதவ் அர்ஜுனாவிற்கு சவால் விடுத்துள்ளார்.
திருச்சி கிழக்கில் ஸ்டாலின் களமிறங்க..
மேலும் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், ''திருச்சி கிழக்கு தொகுதியில் தலைவர் (முக ஸ்டாலின்) போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். அவர் கொளத்தூர் தொகுதியை சிங்கப்பூர் போல் மாற்றி வைத்திருந்தார். ஆனால் கேடுகட்ட அந்த தொகுதி மக்கள் நினைத்து பார்க்க முடியுமா? குறிப்பாக மகளிருக்கு இன்று ஆயிரம் உரிமைத்தொகை கொடுக்கிறோம்.
நாங்கள் மீண்டும் வந்தால் ரூ.2 ஆயிரம் தருவதாக கூறினோம். இன்றைய முதல்வர் ரூ.2,500 தருவதாக கூறினார்கள். இன்று ரூ.2,500 கொடுத்து இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் நடக்கவில்லை. இன்று எங்களின் தலைவர் முதல்வராக வந்திருந்தால் தாய்மார்களுக்கு எல்லாம் ரூ.2 ஆயிரம் கொடுத்து இருப்பார்.
தவெகவை அடித்து விரட்ட வேண்டும்
இனி உள்ளாட்சி தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டசபை தேர்தல் என்றாலும் சரி உள்ளே நுழைய முடியாத அளவுக்கு தவெகவை அடித்து விரட்டுவோம். அதற்கு அனைவரும் தயாராக வேண்டும். ஸ்டாலின் தான் அடுத்த முதலமைச்சர். அடுத்த முதலமைச்சர் என்றால் இன்னும் 4 அல்லது 6 மாதங்கள் கழித்தே இது நடக்கும்'' என்றார்.












Click it and Unblock the Notifications