அனிதா, சுனீதா, ப்ரீதா, சங்கீதா... 'தா தா'ன்னு பெயர் முடியுதே.. இவங்கெல்லாம் யாரு தெரியுமா?
காஞ்சிபுரம்: வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள அகான்க் ஷா என்ற வெள்ளைப் புலி ஈன்றெடுத்த நான்கு பெண் புலி குட்டிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று பெயர் சூட்டியுள்ளார். அனிதா, சுனீதா ப்ரீதா மற்றும் சங்கீதா என்று அந்த புலிக்குட்டிகளுக்கு பெயரிடப்பட்டுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 15.3.2013 அன்று நேரில் சென்ற முதல்வர் ஜெயலலிதா, ஏழு புலிக் குட்டிகளுக்கு அர்ஜுனா, ஆத்ரேயா, காவேரி, சித்ரா, நேத்ரா, வித்யா, ஆர்த்தி என்று பெயர் சூட்டினார். மேலும், பூங்காவில் உள்ள வன விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் உணவு மற்றும் பாதுகாப்பு குறித்தும், பார்வையாளர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
தாரா, மீரா, பீமா
9.5.2014 அன்று அனு என்ற வெள்ளைப் புலி ஈன்றெடுத்த இரண்டு பெண் புலி குட்டிகளுக்கு தாரா மற்றும் மீரா என்றும், ஒரு ஆண் புலி குட்டிக்கு பீமா என்றும் பெயர் சூட்டினார் ஜெயலலிதா.
ஆண் புலிக்குட்டிகள்
நம்ருதா என்ற புலி ஈன்றெடுத்த இரண்டு ஆண் புலி குட்டிகளுக்கு ஆதித்யா மற்றும் கர்ணா என்றும் பெயர் சூட்டினார்.
20 லட்சம் பார்வையாளர்கள்
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பல்வேறு வன உயிரினங்களை ஆண்டிற்கு சராசரியாக 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு களிக்கின்றனர்.
4 பெண் புலிக்குட்டிகள்
உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் அகான்க் ஷா என்ற வெள்ளை பெண் புலி 12.9.2014 அன்று நான்கு பெண் புலி குட்டிகளை ஈன்றது.
பெயர் சூட்டிய ஜெ
முதல்வர் ஜெயலலிதா, அகான்க் ஷா என்ற வெள்ளை பெண் புலி ஈன்றெடுத்த நான்கு பெண் புலி குட்டிகளுக்கு அனிதா, சுனீதா, ப்ரீதா, மற்றும் சங்கீதா என்று பெயர் சூட்டியுள்ளார் என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தா.. தா.. தா
இதில் ஒரு சுவாரஸ்யம் பாருங்கள்.. ஜெயலலிதா வைத்த இந்தப் பெயர்கள் எல்லாம் தா என்ற எழுத்தில் முடிகிறது.. அட ஜெயலலிதா என்ற பெயரும் கூட "தா"வில்தான் முடிகிறது பாருங்க!