பேரறிஞர் அண்ணாவின் 47வது நினைவுநாள்: கருணாநிதி, ஜெயலலிதா அஞ்சலி
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 47வது நினைவு நாளையொட்டி திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. பேரணியின் முடிவில் அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து கருணாநிதி அஞ்சலி செலுத்தினார்.
அண்ணாவின் 47வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி திமுக சார்பில் அமைதி பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திமுக தலைவர் மு. கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்த அமைதி பேரணி சென்னை வாலாஜா சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகே இருந்து புறப்பட்டது.

அமைதி பேரணியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர்கள், முன்னாள், இன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். அமைதி பேரணியின் முடிவில் அண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில், தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

ஓ.பி.எஸ் தலைமையில் அமைச்சர்கள் அஞ்சலி
அண்ணா நினைவுதினத்தை முன்னிட்டு அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தமிழக அமைச்சர்கள் மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
விஜயகாந்த் மலரஞ்சலி
சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று அண்ணாவின் திருவுருவ படத்திற்கு விஜயகாந்த் மலர் தூவி மரியாதை செய்தார். அவருடன் கழக பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார் எம்.எல்.ஏ, கு.நல்லதம்பி எம்.எல்.ஏ, மத்திய சென்னை மாவட்ட செயலாளர் செந்தாமரைக்கண்ணன், வட சென்னை மாவட்ட செயலாளர் யுவராஜ், தென்சென்னை மாவட்ட செயலாளர் வி.என்.ராஜன், மேற்குசென்னை மாவட்ட செயலாளர் ஏ.எம்.காமராஜ் மாவட்ட, பகுதி, வட்ட, கழக நிர்வாகிகள், கழக மகளிர் அணி நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.












Click it and Unblock the Notifications