வெறும் 5 ரூபாயில் எங்க வேணும்னாலும் போலாம்! கோவை தனியார் பேருந்து அறிவிப்பு.. குஷியான மாணவர்கள்
கோயம்புத்தூர்: அரசு பள்ளி மாணவர்கள் தனியார் பேருந்தில் பயணம் செய்தால் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இலவச பஸ் பாஸ் அரசு பேருந்துகளில் மட்டுமே செல்லுபடியாகும். இந்நிலையில் மாணவர்களின் பயணத்தை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு வெறும் 5 ரூபாயை கட்டணமாக வசூலிக்கிறது தனியார் பேருந்து நிர்வாகம்.
பேருந்து போக்குவரத்து நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஓர் அங்கமாகும். ஆனால் நினைத்த நேரத்திற்கு, நினைத்த இடத்திற்கு பேருந்துகள் கிடைக்காமல் இருப்பது நம்மை அதிகமாக எரிச்சலடைய செய்துவிடுகிறது. இந்நிலையில், இந்த பேருந்து போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கிலும், சிறப்பான சேவைகளை வழங்கும் நோக்கிலும் தனியார் பேருந்து போக்குவரத்தை அரசு அனுமதித்தது.
ஆனால், மாற்றுத் திறனாளிகள், பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோருக்கு அரசு பேருந்துகளில் வழங்கப்படும் சலுகைகள் இந்த தனியார் பேருந்துகள் வழங்காது. அதேபோல கட்டுப்பாடற்ற வேகம், அலட்சியமாக பேருந்தை இயக்குதல் போன்ற சம்பவங்கள் தனியார் பேருந்துகள் மீதான பொதுமக்களின் பார்வையை மாற்றியுள்ளது. இருப்பினும் அவசர தேவைக்காக மக்கள் இந்த தனியார் பேருந்துகளை நம்பியுள்ளனர்.

இந்நிலையில் தங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்க தனியார் பேருந்துகள் அவ்வப்போது சில முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஓர் அங்கமாக தற்போது கோவை மாவட்டத்தில் இயங்கும் தனியார் பேருந்து ஒன்று பள்ளி மாணவர்களின் பயணத்திற்கு வெறும் 5 ரூபாயை மட்டும் கட்டணமாக வசூலிக்கிறது. கோகுலம் டிரான்ஸ்போர்ட்டுக்கு சொந்தமான நான்கு பேருந்துகளில் இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கோவையின் க.க.சாவடி பகுதியில் இருந்து உக்கடம் சுங்கம் புலியகுளம் வழியாக உப்பிலிபாளையம் வரை செல்லும் கோகுலம் டிரான்ஸ்போர்ட்டின் எஸ்2 எனும் பேருந்து இந்த சேவையை முதல் கட்டமாக அறிவித்திருக்கிறது. இந்த பேருந்தில் அரசு/தனியார் என எந்த பள்ளி மாணவர்களாக இருந்தாலும், 5 ரூபாய் கொடுத்து எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்கலாம். இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது. அரசு பள்ளி மாணவர்களை போலவே தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட வேண்டும் என்று தனியார் பள்ளி மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் சலுகை விலையில் தனியார் பேருந்தில் மாணவர்கள் பயணிக்க அனுமதியளிக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும், அரசு பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். பள்ளி தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் கூடுதல் பேருந்துகள் விடப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கட்டண சலுகைகளை தனியார் பேருந்துகள் அறிவித்தாலும், இது தனியார் போக்குவரத்தை ஊக்குவிக்கும் நடைமுறைதான் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இந்த கட்டணங்கள், கட்டண சலுகைகள் போன்றவற்றை கடந்து அரசு பேருந்துகள் இயக்கப்படுவதில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. பேருந்து போன்ற பொதுப்போக்குவரத்து என்பது காற்று மாசை வெகுவாக குறைக்கும். அவசியமான நேரத்திற்கு பேருந்துகள் கிடைப்பதில்லை என்பதால்தான் பெரும்பாலான மக்கள் பைக் மற்றும் டாக்ஸிகளை நோக்கி நகர்கின்றனர். இது தனியார் வாகன உற்பத்தியாளர்களுக்கு பெருத்த லாபத்தை ஏற்படுத்துகிறது.
மறுபுறம் காற்று மாசை அதிகரிக்க காரணமாக இருக்கிறது. சொல்லப்போனால் சென்னை உள்ளிட்ட இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு இதுதான் காரணம். எனவே, அரசு பேருந்துகளின் எண்ணிக்கைகள் கணிசமாக உயர்த்தப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications