கச்சத்தீவு திருவிழா கோலாகலம்.. புனித அந்தோணியார் கோயிலில் கூட்டுத்திருப்பலி..பலத்த பாதுகாப்பு
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் உலக மக்கள் நன்மைக்காக கூட்டுத்திருப்பலி நடைபெற்றது.
ராமேஸ்வரம்: கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா அமைதியாக நிறைவு பெற்றது. கச்சத்தீவு திருவிழாவில் இலங்கையை சேர்ந்த 1,500 பேரும், இந்தியாவைச் சேர்ந்த 2,400 பேரும் பங்கேற்றுள்ளனர். நேற்று இந்தியா சார்பில் கச்சத்தீவு திருவிழா நடந்த நிலையில் இன்று இலங்கை சார்பில் நடைபெற்ற கூட்டுத்திருப்பலியில் இரு நாட்டு மீனவர்கள் பங்கேற்று உலக நன்மைக்காக வேண்டிக்கொண்டனர்.
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் பங்கேற்க ராமேஸ்வரத்தில் இருந்து 72 படகுகளில் 2400 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது தான் கச்சத்தீவு. பாக்ஜலசந்தி கடற்பரப்பில் அமைந்துள்ள இந்த கச்சத்தீவுக்கு, ராமேசுவரத்திலிருந்து சுமார் இரண்டரை மணி நேரத்தில் சென்று விடலாம். அதேபோல் இலங்கையின் நெடுந்தீவு மற்றும் தலைமன்னாரில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேரத்தில் கச்சத்தீவை அடையலாம்.

இந்தக் கச்சத்தீவில் 1913ம் ஆண்டு புனித அந்தோணியார் தேவாலயம் நிறுவப்பட்டது. இயற்கைச் சீற்றம், புயல் போன்ற பேராபத்து காலங்களில் காப்பாற்றவும், பெருமளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் புனித அந்தோணியார் ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடத்திய பின்னரே கடலுக்குள் செல்வது வழக்கம்.
கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டுவிட்ட போதிலும், அந்தோணியார் தேவாலயத்தில் வழிபட இந்தியர்களுக்கும் அனுமதி உண்டு. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் கச்சத்தீவு திருவிழாவிற்கு இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து 5000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
அந்தவகையில் இந்த ஆண்டு கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயப் பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருச்செபமாலை, திருச்சிலுவை பாதை தியானம், நற்கருணை ஆராதனை, திருச்சொரூப பவனி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
இன்று காலை இரு நாட்டு மீனவர்களுக்காகவும் உலக நன்மைக்காகவும் காலை 7 மணிக்கு திருச்செபமாலை, திருவிழா திருப்பலி, திருசொரூப ஆசீருடன் திருவிழா நிறைவு பெற்றது. இரு நாட்டு மீனவர்களும் பக்தர்களும் பங்கேற்றதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.












Click it and Unblock the Notifications