ராஜபக்சேவை அழைக்கும் முடிவை மறு ஆய்வு செய்ய ராமதாசும் கோரிக்கை
சென்னை: மோடி பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைக்கும் முடிவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவின் நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பதவியேற்பு விழா டெல்லியில் வரும் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரலாற்று சிறப்பு மிக்க இந்த விழாவில் பங்கேற்க சார்க் அமைப்பின் தலைவர்களை அழைப்பது என்ற கொள்கை முடிவின் அடிப்படையில் இலங்கை அதிபர் மகிந்த இராஜபக்சேவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதாகவும், அதையேற்று அவரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஐ.நா. மனித உரிமை ஆணையரின் போர்க்குற்ற விசாரணையை எதிர்கொண்டுள்ள இராஜபக்சேவை பெருமைமிக்க இந்த விழாவுக்கு அழைப்பது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இராஜபக்சேவை அழைக்கும் முடிவை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications