சூளைமேட்டில் மதுக்கடை முற்றுகை: மதிமுக, விசிக, மமக தொண்டர்கள் கைது
சென்னை: சென்னை சூளைமேட்டில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்ற மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சித் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் இன்று ஒருநாள் முழுஅடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

டாஸ்மாக் கடை முற்றுகை
மதிமுகவின் துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமையில் சென்னை சூளைமேட்டில் இன்று டாஸ்மாக் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மனிதநேயமக்கள் தொண்டர்கள் பங்கேற்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் மதுக்கடை முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றதால் சூளைமேடு பகுதியில் பதற்றம் நிலவியது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மல்லை சத்யா உள்ளிட்ட தொண்டர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது வாக்கு வாதம் ஏற்பட்டது. போலீசாருக்கும் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்படவே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தள்ளுமுள்ளு பதற்றம்
சூளைமேடு சாலையில் கூட்டம் அதிகரிக்கவே, பதற்றமும் அதிகரித்தது. அங்கு வந்த போலீசார் மல்லை சத்யா உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
சாத்தான் வேதம் ஓதுகிறது
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மல்லை சத்யா, மதுவுக்கு எதிரான போராட்டம் தீவிரமடையும் என்று கூறிய அவர், மதுவுக்கு எதிரான போராட்டத்தை சிலர் அரசியலாக்க முயலுகின்றனர். அது சாத்தான் வேதம் ஓதுவதைப் போன்றது என்றார். மதுவிற்கு எதிரான அடுத்த கட்ட போராட்டத்தினைப் பற்றி தலைவர்கள் அறிவிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
மதுவுக்கு எதிரான முழக்கம்
கைது செய்யப்பட்ட அனைவரும் வேனில் ஏற்றி அழைத்துச்செல்லப்பட்டனர். அப்போது மதுவுக்கு எதிராக முழக்கமிட்ட தொண்டர்கள். மதுக்கடைகளை மூடும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications