பொறுப்பற்ற எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த்தும் மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டியவர் தான்: உதயகுமார்
திண்டுக்கல்: தமிழக சட்டசபை எதிர்கட்சித் தலைவராக இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பணியை சரியாக செய்யாமல் பொறுப்பற்ற முறையில் நடந்து வருகிறார். எனவே அவரும் மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டிய ஒரு தலைவர் என்று கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளரும் பச்சை தமிழகம் கட்சி தலைவருமான உதயகுமார் கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில் இன்று கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளரும், பச்சை தமிழகம் கட்சி தலைவருமான உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறுகையில், தமிழகத்தில் மக்களை பாதிக்கும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மீத்தேன் எரிவாயு திட்டம், கெயில் நிறுவன ஒப்பந்தம், கூடங்குளம் அணுஉலை, மீனவர் பிரச்சனை போன்ற எதிலும் மக்கள் நலன் பற்றி சிந்திப்பதில்லை.

உரிய நேரத்தில் இதனை தடுத்து நிறுத்தாமல் காலம் கடந்த பிறகு குரல் கொடுப்பது மக்களை ஏமாற்றும் செயல். தற்போதைய ஆளும் அ.தி.மு.க. அரசு இதனையே செய்து வருகிறது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்குகள் போட்டனர்.
தி.மு.க. மக்கள் நலனுக்கு ஆதரவு தெரிவிப்பது போல இருந்தாலும் அந்த கட்சியும் ஒரு குடும்பத்திற்காக மட்டும் சுயநலத்துடன் செயல்படுகிறது. எனவே தமிழக மக்கள் இந்த 2 கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும்.
தமிழகத்தில் எதிர்கட்சி தலைவராக இருக்கும் விஜயகாந்த் தனது பணியை சரியாக செய்யாமல் பொறுப்பற்ற முறையில் நடந்து வருகிறார். ஒரு நடிகரை எதிர்கட்சி தலைவர் அந்தஸ்தில் அமர வைத்தது மக்கள் தவறு. ஆனால் அவரை தற்போது பல கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்து காத்திருப்பது வேடிக்கையான ஒன்று. விஜயகாந்த்தும் மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டிய ஒரு தலைவர்.
தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள சேதத்துக்கு நீர்நிலைகள் ஆக்கிரமிப்பே காரணம் என தெரிய வந்தும் அரசு இன்னும் எந்தவித முன்னேற்பாடும் செய்யாமல் இருப்பது மக்கள் பற்றி சிந்தனை இல்லாமல் இருப்பதையே காட்டுகிறது.
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு மட்டுமின்றி இயற்கை வளங்கள் சுரண்டப்படுதல், தாது மணல் கொள்ளை போன்றவை சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. திண்டுக்கல் அரண்மனை குளத்தில் மாநகராட்சி சார்பில் பஸ் நிலையம் அமைக்க முயற்சி எடுத்து வருகின்றனர்.
இதனை நாங்கள் எதிர்க்கிறோம். நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. இதனையும் மீறி பஸ் நிலையம் அமைக்கும் முயற்சி எடுத்தால் நாங்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்'' என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications