அப்துல் கலாம் பிறந்த தினத்தை ஆன்லைனில் கொண்டாடிய பள்ளி மாணவர்கள்
மக்கள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாமின் பிறந்தநாளை தேவகோட்டை பள்ளி மாணவர்கள் ஆன்லைனில் உற்சாகமாக கொண்டாடியுள்ளனர்.
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஊரடங்கு நேரத்தில் அப்துல் கலாம் பிறந்த நாளை வீட்டிலேயே ஓவியம் வரைந்தும் ,கவிதை சொல்லியும் , அப்துல் கலாமின் சிறப்புகளை பேசியும் உற்சாகமாக நினைவு கூர்ந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் மாணவர்களுக்கு ஓவியம்,கவிதை சொல்லுதல்,பேச்சு போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

கொரோனா லாக்டவுன் காரணமாக பள்ளி மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பதை கருத்தில் கொண்டு மாணவர்கள் வீட்டிலேயே ஓவியம் வரைய சொல்லியும்,கவிதை மற்றும் பேச்சு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களை ஆன்லைன் வழியாக வீடியோவாக அனுப்ப சொல்லி பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கேட்டுக்கொண்டார்.

ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துமீனாள் ,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி ஆகியோர் செல்போன் மூலம் மாணவர்களை தொடர்பு கொண்டு ஊக்குவித்தனர்.

மாணவர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே இது போன்ற போட்டிகளில் பங்கேற்க செய்வது அவர்களது உடல்நலம் மற்றும் மனநலத்துக்கு உதவுவது ஆகும். ஓவியம்,கவிதை,பேச்சு போட்டிகளில் திவ்யா,திவ்யஸ்ரீ,ஓவியா,ஜோயல்,ரொனால்ட், கீர்த்தியா, சபரி, ஹரிப்பிரியா, ஈஸ்வரன்,சண்முகம்,ஆகாஷ், அஜய், நித்திஷ், பிரதிக்சா, கனிகா, தேவதர்ஷினி,ராஜேஸ்வரி, நவினாஸ் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பள்ளி திறந்த பிறகு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாட வகுப்புகளும், பல்வேறு மத்திய,மாநில அரசுகள் நடத்தும் ஆன்லைன் போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க வைப்பதும், சதுரங்க பயிற்சிகள் நடைபெற்று வருவதும் ஊரடங்கு காலத்தில் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications