10 அறிக்கைகளுக்கு பிறகு வந்த முத்தான அப்பல்லோ அறிக்கை !
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை கடந்த 10 நாட்களாக எந்த அறிக்கையும் அளிக்காமல் இருந்த நிலையில், இன்று 11வது அறிக்கையை வெளியிட்டுள்ளது அதிமுகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பியல், சிங்கப்பூர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவும் சென்னை வந்து அவ்வப்போது ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனிடையே கடந்த 10 நாட்களாக எந்த அறிக்கையும் வரவில்லை. கடைசியாக 10ம் தேதிதான் அறிக்கை வெளியானது. அதற்குப் பிறகு எந்த அறிக்கையும் வரவில்லை. இதனால் முதல்வர் உடல்நிலை குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகின. இதனால் அதிமுகவினர் சோகமடைந்தனர்.
ஜெயலலிதாவின் உடல்நலம் விசாரிக்க அப்பல்லோ வரும் தலைவர்களின் பேட்டி மட்டுமே அவர்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. ஜெயலலிதா தனக்கான உணவை தானே எடுத்துக்கொள்வதாக அதிமுக செய்தித் தொடர்பாளரும், மூத்த தலைவருமான பொன்னையன் நேற்று கூறினார்.
இந்த நிலையில் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதிகாரப்பூர்வமாக அப்பல்லோ மருத்துவமனை இன்று 11 வது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஜெயலலிதாவின் உடல்நிலை படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், அவர் மருத்துவர்களுடன் பேசி வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 10 அறிக்கைகளுக்கு பிறகு வந்த இந்த முத்தான அறிக்கை அதிமுகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தங்களது பிரார்த்தனை, வேண்டுதல்கள் நிறைவேறியுள்ளதாகவும் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.