மீண்டும் பிரச்சாரம்: அரவக்குறிச்சி, தஞ்சைக்கு படையெடுக்கும் அரசியல் தலைவர்கள்
அரவக்குறிச்சி: தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள அரவக்குறிச்சி மற்றும் தஞ்சையில் அரசியல் தலைவர்கள் மீண்டும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று அரவக்குறிச்சியில் பிரச்சாரம் செய்கிறார்.
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. இதில் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை ஆகிய தொகுதிகளில் மட்டும் தேர்தல் மே 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அந்த இரண்டு தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சையில் 16ம் தேதி மாலை 6 மணி முதல் 21ம் தேதி மாலை வரை பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது. இதையடுத்து அரசியல் தலைவர்கள் அந்த தொகுதிகளில் மீண்டும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் கே.சி. பழனிச்சாமியை ஆதரித்து இன்று பிரச்சாரம் செய்ய உள்ளார். அரவக்குறிச்சியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி களத்தில் உள்ளார்.
தஞ்சை மற்றும் அரவக்குறிச்சியில் 23ம் தேதி வாக்குப்பதிவு நடத்தி 25ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications