தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் தேதி முடிவாகவில்லை: ஹைகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
சென்னை: தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைம் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டசபைக்கு, கடந்த மே 16-ந் தேதி தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு முன்பாக தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா அதிகமாக இருந்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து, தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு மே 23-ல் தேர்தல் நடக்கும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு, ஜூன் 13-க்கு தள்ளிவைக்கப்பட்டது. இரு தொகுதிகளிலும் முன்கூட்டியே தேர்தல் நடத்தக் கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மற்ற 232 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதனிடையே,தேர்தல் முடிந்த நிலையில் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சீனிவேல் இறந்தார். அதனால், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளின் தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தலை நடத்தக் கோரும் வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பி, தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தலை மீண்டும் நடத்தும் தேதி முடிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.