பேரறிஞர் அண்ணா.. படம் அல்ல ஒரு பாடம்: கி. வீரமணி

பேரறிஞர் அண்ணாவின் 45வது நாளையொட்டி கி. வீரமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
செயற்கரிய செய்த தந்தை பெரியாரின் தலைமகன் அறிஞர் அண்ணாவின் 45ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (3.2.2014). இது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாளே தவிர, வைதீகபுரி அகராதியில் உள்ள ‘திதியோ, சிரார்த்தமோ,திவஷமோ' அல்ல.
நம் சிந்தனைகளைக் கூர் தீட்டிக் கொள்ளும் ஒரு வாய்ப்பு நாள்!
அண்ணா இன்று பலருக்குப் படம் மட்டுமே! உண்மையில் அவர் பாடம் ஆக வேண்டும்.
- பாடமல்ல! இது ஒரு விசித்திர வேடிக்கை, நமக்கு வேதனை!
அண்ணா பெயர் சொன்னால் போதுமா?
அண்ணா என்றால் யார்? எதைச் செய்தவர்?
அண்ணா என்றால் பகுத்தறிவு,
அண்ணா என்றால் சமூகநீதி,
அண்ணா என்றால் அடக்கம், எளிமை, ஆடம்பரமின்மை!
அண்ணா என்றால் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
ஆகியவைகளைப் போற்றிப் பின்பற்றிய பண்பாளர்!
இவைகளை மறந்துவிட்டு அண்ணாவைப் புறந்தள்ளி பூஜை செய்வதுபோல சடங்கு நிகழ்வுகளை நடத்துவது அண்ணாவைக் கொச்சைப்படுத்தும் கோணல் நடவடிக்கைகளேயாகும்.
"நான் கண்ட, கொண்ட ஒரே தலைவர் தந்தை பெரியார்'' என்று கூறி இறுதி மூச்சடங்கும் வரை பெரியாரைத் துணைக் கொண்ட பெம்மான்!
எனவே அண்ணாநினைவு நாளில் அவர்தம் லட்சியங்களை நெஞ்சில் ஏந்தி, பீடு நடைபோட உறுதி ஏற்று, அவர் காண விரும்பிய பெரியார் உலகத்தைப் படைப்போம்!
அது - வெறும் தேர்தலை மட்டும் பொறுத்ததல்ல, அடுத்த தலைமுறைகளின் மானவாழ்வைப் பொறுத்த மகத்தான நிலைப்பாடு;
வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா!
இவ்வாறு கி. வீரமணி தமது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications