அசலாம்பாள் கோவில் குளத்தை தூர் வார சிவனடியார்களுடன் சென்ற அர்ஜூன் சம்பத் கைது...!
கடலூர்: தடையை மீறி கோவில் குளத்தை சுத்தம் செய்ய முயன்ற இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் உள்ளது பிரசித்தி பெற்ற அருள்மிகு வைத்தியநாத சாமி உடனுறை அசலாம்பாள் கோயில் உள்ளது. இக்கோயில் சமீபத்தில் புணரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஆனால் இக்கோயிலுக்கு எதிரேயுள்ள கோயில் திருக்குளம் சுமார் 40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சுற்றிலும் வீடுகள் கட்டி, வீடுகளின் கழிவறையாக குளம் மாற்றப்பட்டுள்ளது என்பது சிவனடியார்களின் குற்றச்சாட்டாகும்.

குளத்தை சீரமைக்க கோரி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், அறநிலையத்துறை அலட்சியம் காட்டி வருவதால், கடந்த 13ஆம் தேதி திட்டக்குடி வந்தார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத். குளத்தை பார்வையிட்ட பின்னர், உழவாரப்பணியை துவக்கி வைத்தார்.
22.04.2015 புதன்கிழமை அர்ஜூன் சம்பத் தலைமையில் திருப்பூர், தஞ்சை, சென்னை உள்ளிட்ட பல்வேற இடங்களில் இருந்து வந்திருந்த சிவனடியார்கள், மடாதிபதிகள், சிவபக்தர்களுடன் குளத்தில் உழவாரப் பணிகளை மேற்கொள்ள ஊர்வலமாக சென்றனர். அப்போது, டிஎஸ்பி பாண்டியன், மாவட்ட துணை கண்காணிப்பாளர் செந்தில், இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
ஆக்கிரமிப்பாளர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருப்பதால் தற்போது அந்த இடத்திற்கு செல்ல அனுமதிக்க முடியாது என்று போலீசார் தெரிவித்தனர். அப்போது பேசிய அர்ஜூன் சம்பத், இந்தக் கோயில் வரலாற்று சிறப்பு மிக்கது. குடமுழக்கு நடத்தியுள்ளனர். குடமுழக்கு நடத்தியவுடன் கோயிலுக்கு உரிய குளத்தில் தெற்ப உற்சவம், தேரோட்டம் நடத்த வேண்டும். இதை நடத்தினால்தான் பக்தர்களுக்கு முழுமையான அருள் கிடைக்கும். கோயில் குளம் ஆக்கிரமிப்புக்கு அறநிலையத்துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணம்.
சிவன் சொத்து வேண்டாம். எங்கள் வீட்டு சாவியை ஒப்படைக்கிறோம். நாங்கள் இருந்த வீட்டை காலி செய்துவிட்டோம். இடித்துக்கொள்ளுங்கள் என்று அறநிலையத்துறை இணை ஆணையருக்கு கடிதமும், சாவியும் தங்கராசு என்பவர் கொடுத்துள்ளார். ஆக்கிரமிப்பு செய்தவர்களே இப்படி செய்யும்போது, அந்த இடத்தை ஏன் சுத்தம் செய்யக் கூடாது.
தமிழக முதல்வர் ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளவர். அவர் இதில் தலையிட்டு கோயில் சொத்தை காப்பாற்ற வேண்டும். அலட்சியம் காட்டினால், பக்தர்களையும், மக்களையும் திரட்டி பெரும் போராட்டம் நடத்துவோம். குளம் சீரமைக்கும் வரை விடமாட்டோம் என்றார்.
இதனைத் தொடர்ந்து அர்ஜுன் சம்பவத் உள்ளிட்ட ஊர்வலகமாக வந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications