21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் ராணுவ வீரர் விஜயகுமார் உடல் நல் அடக்கம்
திருநெல்வேலி: ஜம்மு-காஷ்மீரின் கார்கில் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட தமிழக ராணுவ வீரர் விஜய்குமாரின் உடல் இன்று அவரது சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதியில் கடந்த 17ம் தேதி இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது சில இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டது. கார்கில் பகுதியில் 17 ஆயிரத்து 500 அடி உயரத்தில் உள்ள ஒரு ராணுவ சாவடியின் மீது பனிப்பாறைகள் சரிந்து விழுந்தன.
பனிப்பாறைகள் சரிவில் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த இரு ராணுவ வீரர்கள் இருவர் சிக்கிக்கொண்டனர். சரிந்து விழுந்த பனிப்பாறைகள் அவர்களை சிறிது தூரம் இழுத்துச் சென்றன. இதனால் வெளியே வர முடியாமல் பனிப்பாறைகளுக்கு அடியில் புதையுண்டதால் அவர்களால் வெளியே வர முடியவில்லை.

ராணுவ வீரர்களை மீட்கும் முயற்சியில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டனர். பனிக்கட்டி குவியலுக்குள் புதையுண்ட ஒரு வீரரை உயிருடன் மீட்டனர். மற்றொரு வீரரை தேடி வந்த நிலையில் 15 அடி ஆழத்தில் புதைந்து கிடந்த ஒரு வீரரை திங்கட்கிழமையன்று மீட்புக்குழுவினர் சடலமாக மீட்டனர். பனிச்சரிவில் சிக்கி பலியான அந்த வீரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் அவரது பெயர் விஜயகுமார் என்பதும் தெரியவந்தது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வல்லராமபுரத்தை சேர்ந்த கருத்தபாண்டி என்பவரின் மகன் விஜயகுமார், 23. இவர் காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். பனிச்சரிவில் சிக்கி பலியான விஜயகுமாரின் உடல் ஜம்முவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு அவரது உடல் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு விஜயகுமார் உடலுக்கு ராணுவ உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து டெல்லியில் இருந்து விமானம் மூலம் இரவு 10.50 மணிக்கு திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து கார் மூலம் விஜயகுமாரின் சொந்த ஊருக்கு, கொண்டு வரப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலிக்காக விஜயகுமார் வைக்கப்பட்டது.
வல்லராமபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் விஜயகுமாருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தமிழக அரசின் சார்பில் 10 லட்சத்திற்கான காசோலையை இறந்த இராணுவ வீரரின் தந்தை கருத்தபாண்டியிடம் வழங்கினார்
இதையடுத்து இன்று மதியம், இறுதி சடங்குகள் செய்யப்பட்டு, அப்பகுதியில் உள்ள மயானத்தில் முழு இராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க 2.00 மணியளவில் உடல் நல் அடக்கம் செய்யப்பட்டது.
பனிச்சரிவில் சிக்கி மரணிக்கும் தருவாயிலும் அந்த வீரர் தனது தாயின் போட்டோவை மார்போடு அனைத்துக்கொண்டே உயிரை விட்டிருந்தார் என்பதைக் கேட்ட அவரது பெற்றோரும் உறவினர்கள் கதறி அழுதனர்.












Click it and Unblock the Notifications