ஆர்.கே நகரில் 500 குக்கர்கள் பறிமுதல் : வாக்காளர்களுக்கான பரிசுபொருளா? என விசாரணை
ஆர்.கே நகரில் நடந்த வாகன பரிசோதனையில் 500 குக்கர்களை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.
சென்னை : ஆர்.கே நகர் வாகன பரிசோதனையில் 500 குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. இது குறித்து வேன் ஓட்டுனரிடம் விசாரணை நடந்து வருகிறது .
சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 21-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான அனைத்து வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கும் டி.டி.வி. தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்படாமல், பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது.
ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், காவல்துறையும், தேர்தல் ஆணையமும் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளன. இருப்பினும் வாக்காளர்களுக்கு ரகசியமான முறையில் பணப்பட்டுவாடா நடப்பதாக தொடர்ந்து விமர்சனம் எழுந்து வருகிறது.
ஆர்.கே நகரில் நுழையும் வாகனங்கள் தீவிர வாகன தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே காவல்துறையால் அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில், இன்று சென்னை காசிமேட்டில் நடந்த வாகன தணிக்கையில் வேன் ஒன்றில் இருந்து 500 குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இவை எதற்காக கொண்டு வரப்பட்டன ? வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய கொண்டு வரப்பட்டதா ? என்பது குறித்து வாகன ஓட்டுனரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. ஏற்கனவே, 50,000 குக்கர்கள் ரகசியமான முறையில் ஆர்.கே நகரில் வந்து இறங்கி உள்ளதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.