தமிழகம் முழுவதும் கலைக் கல்லூரிகள் திறப்பு.. பட்டாசு வெடித்து மாணவர்கள் கொண்டாட்டம்
சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று அரசு மற்றும் தனியார் கலைக் கல்லூரிகள் செமஸ்டர் விடுமுறை முடிந்து மீண்டும் திறக்கப்பட்டன.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின்னர் ஜூன் முதல் வாரத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிக் கூடங்கள் திறக்கப்பட்டன.
அதேபோல பிளஸ் ஒன் வகுப்புகள் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் தொடங்கின.
இந்த நிலையில் அரசு மற்றும் தனியார் கலைக் கல்லூரிகள் நேற்று தொடங்கின. இதையொட்டி அனைத்துக் கல்லூரிகளும் விழாக் கோலம் பூண்டிருந்தன. புதிய மாணவர்களை பழைய மாணவர்கள் வரவேற்ற நிகழ்ச்சிக்கு பல கல்லூரிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
ராகிங் உள்ளிட்டவை நடைபெறாமல் இருக்கும் வகையில் பல கல்லூரிகளில் மூத்த மாணவர்கள், புதிய மாணவர்களுக்கு இனிப்பு கொடுத்து வரவேற்றதையும் காண முடிந்தது.
சென்னை நந்தனத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் பட்டாசு வெடித்தும், பூத் தூவியபடியும் முதல் நாளை வரவேற்றுக் கொண்டாடி மகிழ்ந்தனர். அதே போல சென்னை நகர கல்லூரி மாணவர்கள் பலர் பஸ்களை அமர்க்களப்படுத்திய காட்சியையும் காண முடிந்தது.