அருள்நிதி-கீர்த்தனா திருமணம்: எதிர்கட்சித்தலைவர்கள் திரளாக வாழ்த்து… அரசியலில் புதிய திருப்பம்?
சென்னை: தி.மு.க. தலைவரும் கருணாநிதியின் பேரனுமான நடிகர் அருள்நிதியின் திருமணம், இன்று சென்னை அறிவாலயம் கலைஞர் அரங்கில் பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் திமுகவினர் மட்டுமல்லாது கட்சி பேதமின்றி பல்வேறு முக்கிய அரசியல் கட்சித்தலைவர்களும் பங்கேற்றனர். இதில் பேசிய கருணநிதி, தமிழகத்தில் சுயமரியாதை திருமணங்கள் தொடர்ந்து நடக்க வேண்டும் என்று கூறினார்.
சுயமரியாதை திருமணங்கள்
தமிழகத்தில் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் ஒடுக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றனர் என்றும் கருணாநிதி கூறினார்.மேலும் தமிழகத்தில் மறுமலர்ச்சி, சுயமரியாதை திருமணங்கள் நிகழ வேண்டும் என்றும் கருணாநிதி தெரிவித்தார்.
மோடி – பிரணாப் வாழ்த்து
கருணாநிதியின் பேரன் திருமணத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி, குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளனர்.
வைகோ வாழ்த்து
அருள்நிதி - கீர்த்தனா திருமண விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று புத்தகங்கள் கொடுத்து வாழ்த்துகளை கூறினார். மேலும் விடுதலை கட்சித் தலைவர் திருமாவளவன், புதிய கிருஷ்ணசாமி பங்கேற்று வாழ்த்துகளை கூறியுள்ளனர்.
தமிழிசை சவுந்தராராஜன்
பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அரசியலில் திருப்பம்
திருமணத்திற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை என்று கூறினாலும் அருள்நிதியின் திருமணத்தின் மூலம், 2016 சட்டமன்ற தேர்தலுக்கு புதிய கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. அதிமுகவிற்கு எதிராக அனைத்து கட்சியினரையும் அணிதிரளச் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் எதிர்கட்சித்தலைவர்கள், அரசியல் தலைவர்கள் ஒருவர் விடாமல் அழைப்பு விடுத்தார் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின்.
விஜயகாந்த் மவுனம்
மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அழைப்பு விடுத்ததை அடுத்து அனைத்து எதிர்கட்சித்தலைவர்களும் திருமண வரவேற்பு, திருமணவிழாவிற்கு வந்து வாழ்த்து கூறினர். ஆனால் கருணாநிதியின் பிறந்தநாளுக்கும் வாழ்த்து கூறாமல் மவுனம் காத்த விஜயகாந்த், இதுவரை திருமண விழாவிற்கும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பதிலாக மைத்துனர் சுதீஷ் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.