ஐயா, எவ்வளவு பணம் தருவீங்க?: வைகோவை வியக்க வைத்த அருப்புக்கோட்டை வாக்காளர்கள்
விருதுநகர்: அருப்புக்கோட்டையில் வாக்கு கேட்டு சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் ஐயா எவ்வளவு பணம் கொடுப்பீர்கள் என வாக்காளர்கள் சிலர் கேட்டு அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வீதி வீதியாக, வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், அவரது கட்சியினரும் ஈடுபட்டிருந்தார்களாம்.
50 ஆண்டுகால அரசியலில் பத்துப் பைசா சம்பாதிக்காத மனிதர் வைகோ. நேர்மையாக இருக்கிறார். நாடாளுமன்றத்தில் பேச தகுதி படைத்தவர். அவருக்கு வாக்களிக்க வேண்டியது உங்கள் கடமை என்றும், அவர் சென்ற முறை தோல்வியுற்றது விருதுநகர் மக்கள் செய்த மாபெரும் வரலாற்றுப் பிழை என்றும் மதிமுவினர் மக்களிடம் எடுத்துரைத்தனர்.
அதே வேளையில் ஐயா ஓட்டுக்கு எல்லாரும் பணம் தருகின்றார்களாம். நீங்கள் எவ்வளவு பணம் தருவீர்கள்? என்று பாமர வாக்களர்கள் சிலர் வைகோ காதுபடவே கேட்டுவிட்டார்களாம். விருதுநகர் தொகுதி முழுக்க பணம் எதிர்பார்க்கும் வாக்களார்கள் பெரும் அளவில் உள்ளதாக கூறப்படுகின்றது. குறிப்பாக திருமங்கலம் வாக்களார்கள் சிலர் பணம் கொடுத்தே ஆக வேண்டும் என அன்புக் கட்டளை இட்டுள்ளார்களாம்.
இதை கேட்டு கோபம் அடைந்த வைகோ, பணம் கொடுப்பவர்கள் கொள்ளைக்காரர்கள், நாங்கள் கொள்கைக்காரர்கள் அல்ல என்று சிவகாசி வெடிபோல் வெடித்தாராம்.