டிச.18க்குப் பின் ஜெ.வுக்கு ஒரு நாள்கூட ஜாமீன் நீட்டிப்பு கிடையாது: தலைமை நீதிபதி எச்சரிக்கை
சென்னை: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு மற்றும் தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் உரிய ஆவணங்களை டிசம்பர் 18-ந் தேதிக்குள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாக வேண்டும் என்று ஜெயலலிதா தரப்புக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் 18-ந் தேதிக்குள் ஆவணங்களைத் தாக்கல் செய்யாவிட்டால் ஜெயலலிதா உள்ளிட்டோரின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுவிடும் என்றும் தலைமை நீதிபதி தத்து எச்சரித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் அனைவரும் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் அம்மனு நிராகரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் நான்கு பேரும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடைபெற்ற விவாத விவரம்:

- ஜெயலலிதா ஜாமீன் மனு மீது ஒரு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. ஜெயலலிதா சார்பாக இன்று காலை 11.30 மணிக்கு மூத்த வழக்கறிஞர் பாலிநாரிமன் ஆஜரானார்.
- பாலி நாரிமன் தனது வாதத்தின் தொடக்கத்தில், கர்நாடகா உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்காதது தவறு என்று கூறி பல்வேறு வழக்குகளை உதாரணம் காட்டி வாதிட்டார்.
- பின்னர் தலைமை நீதிபதி தத்து, "எவ்வளவு காலத்துக்குள் ஜெயலலிதாவால் ஆவணங்களைத் தாக்கல் செய்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை எதிர்கொள்ள முடியுமா?" என்றும் நாரிமனிடம் கேள்வி எழுப்பினார்.
- இதற்கு "6 வார காலத்துக்குள்" ஆவணங்களைத் தாக்கல் செய்ய முடியும் என்று நாரிமன் பதிலளித்தார்.
- மேலும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் மேல்முறையீட்டு மனு தொடர்பான வழக்கை முடித்துவிட முடியும் என்றும் நாரிமன் கூறினார்.
- இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி தத்து, வழக்கறிஞர் பாலி நாரிமனின் உத்தரவாதத்தை ஏற்றுக் கொள்கிறோம். இதற்காக அவர் பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்றார்.
- இதன் பின்னர் நாரிமனிடம், நீங்கள் மேல்முறையீட்டு வழக்கு ஆவணங்களை 2 மாதத்துக்குள் தயார் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் 3 மாதத்துக்குள் இந்த விசாரணையை நடத்தி முடிக்க கர்நாடகா உயர் நீதிமன்றத்தைக் கோர வேண்டும். 2 மாதத்துக்குள் உங்களால் மேல்முறையீட்டு ஆவணங்களை தயார் செய்ய முடியவில்லை எனில் நாங்கள் அதற்கு மேல் ஒருநாள் கூட நீட்டிப்பு தரமாட்டோம் என்றார்.
- இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கும் ஜாமீன் அளித்து சுருக்கமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
- இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் 18-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
- ஜெயலலிதா வழக்கறிஞர் நாரிமனிடம் மீண்டும் ஒரு முறை தலைமை நீதிபதி தத்து, "வழக்கு ஆவணங்களை டிசம்பர் 18-ந் தேதி தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.. நாங்கள் ஜாமீனை மேலும் ஒரு நாள் கூட நீட்டிக்கமாட்டோம்" என்று கூறினார்.
- டிசம்பர் 18-ந் தேதிக்குள் மேல்முறையீட்டு வழக்கின் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாவிட்டால் ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை உடனே உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிடும் என்று மீண்டும் மீண்டும் நாரிமனுக்கு நினைவூட்டினார் தலைமை நீதிபதி தத்து.
- ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றத்துக்குள் இருந்த அதிமுக வழக்கறிஞர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.












Click it and Unblock the Notifications