அதிமுக கோஷ்டிகளிடையே தீவிரமாகும் மோதல்- எடப்பாடியின் மவுனம் எப்போது கலையும்?
அதிமுகவில் எம்பி, எம்எல்ஏக்களிடையேயான மோதல்களும் விமர்சனங்களும் அதிகரித்து வரும் நிலையில் இந்தப் பிரச்னைகளுக்கு முதல்வர் பழனிச்சாமி எப்போது வாய் திறப்பார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.
சென்னை : மறைந்த பிரதமர் நரசிம்மராவ் போல முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அமைதி காத்தது போதும். உடனே தினகரன் விவகாரம் குறித்து வெளிப்படையாக பேசவேண்டுமென்று, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் பேட்டி அளித்துள்ளார். என்னதான் பிரச்னை இப்போது?
பால் கலப்பட விவகாரத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் காட்டமான பேச்சு தொடக்கத்தில் ரசிக்கும்படி இருந்தது, ஆனால் தனியார் பாலில் கலப்படம் இல்லை என்பதை புனே ஆய்வு மையத்தின் முடிவுகள் தெளிவாகக் காட்டின. ஆனாலும் தொடர்ந்து தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாக வெடிகுண்டுகளை வீசுவதையாரும் விரும்பவில்லை. இந்தப் பிரச்னையில் முதலல்வர் தலையிட்டு ஒரு முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்பது எல்லோரது விருப்பமாக இருந்தது ஆனால் இதுவரை முதல்வர் வாய் திறக்கவே இல்லை.
அதேபோல், திருத்தணி எம்.பி அரியின் பேட்டி எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவதுபோல் அமைந்தது. சிறைதண்டனை பெற்றவர்கள் எப்படி கட்சியை நிர்வகிக்க முடியும்? சசிகலா, தினகரன் உடனடியாக கட்சியிலிருந்து விலகியிருக்கவேண்டும் என்று சொல்லி மோதலை இன்னும் பெரிதாக்கினார்.

பொறுமையை சோதிக்காதீங்க
குழப்பத்தை ஏற்படுத்திவரும் இது போன்ற பேச்சுக்களை எடப்பாடி பழனிச்சாமி எப்படி பொறுத்துக் கொண்டிருக்கிறார்? என்று வெற்றிவேல் பொங்குகிறார். சசிகலாவும், தினகரனும் இல்லையென்றால் ஆட்சியில்லை என்று சொல்லும் வெற்றிவேல், பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று எச்சரிக்கிறார்.

ஏன் இத்தனை அவசரம்
அதேபோல், குடியரசு தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதில் எடப்பாடியார் மிக வேகமாக செயல்பட்டதன் பின்னணி என்ன என்றும் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இது குறித்தும் இதுவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முழுமையான விளக்கம் கொடுக்கவில்லை.

அசாதாரண சூழலில் அரசு
இப்படி பல மோதல்கள் மத்தியில் அமைதியாக எடப்பாடி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கிறார் என்று விமர்சிக்கிறார்கள் எதிர்க்கட்சியினர். மோதும் அணிகளின் அடுத்து கட்டம் நிச்சயம் அசாதாரண நிகழ்வுக்கு கொண்டு போய் விடும் என்று கணிக்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள்.

பஞ்சமில்லாத பரபரப்பு
விரைவில் தேர்தல் என்று எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சென்ற இடமில்லாம் பேட்டி கொடுத்துவருகிறார். இதையெல்லாம் வைத்துப்பார்க்கும்போது தமிழக அரசியல் களத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.












Click it and Unblock the Notifications