டீ, காபி விலை கிடுகிடுவென உயரும் ஆபத்து.. தனியார் பால் விலை உயர்வால்!
சென்னை: தனியார் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், டீ கடைகளில் விற்பனை செய்யப்படும் டீ, காபி விலையும் உயர்த்த வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளதாக டீ கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிப்ரவரி மற்றும் மே முதல் வாரத்தில், தனியார் பால் விற்பனையாளர்கள், ஒரு லிட்டருக்கான பால் விலையை, 2 முதல், 4 ரூபாய் வரை உயர்த்தினர். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு லிட்டருக்கான பால் விலையை மேலும், 2 ரூபாய் உயர்த்தியுள்ளனர்.

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் தனியார் பால்தான் ஓட்டல் முதல் சிறிய அளவிலான டீ கடை வரை பயன்படுத்தப்படுகிறது. ஆவின் பால் குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டும் தான் கிடைக்கிறது. பெரும்பாலான டீ கடைகள் தனியார் பாலை சார்ந்த கடைகளை நடத்த வேண்டியுள்ளது. இதனால், டீ கடைகளில் டீ, காபி விலை உயர்வடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக டீ கடை விற்பனையாளர் சங்க உறுப்பினர் ஒருவர் கூறுகையில்,
பொதுவாக பெரும்பாலான டீ கடைகளில் தனியார் பால் தான் உபயோகிக்கப்படுகிறது. ஆனால், தனியார் பாலின் விலை அடிக்கடி உயர்ந்து வருகிறது. தற்போது தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியதன் மூலம் எங்களுக்கு மாதம் சுமார் ரூ.2500 வரை அதிகமாக செலவாகும். இதன் காரணமாக டீ, காபி விலை உயர வாய்ப்பு இருக்கிறது. இது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications