மாமல்லபுரம் அருகே ஏ.டி.எம். காவலாளி கழுத்து அறுத்து கொலை!
சென்னை: மாமல்லபுரம் அருகே உள்ள ஏ.டி.எம் ஒன்றில் காவலாளியை கழுத்து அறுத்து கொலை செய்து கொள்ளையடிக்க முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிருஷ்ணன்காரனை மெயின் ரோட்டில் ஐசிஐசிஐ வங்கியின் ஏடிஎம் உள்ளது. அந்த ஏடிஎம்-ல் காவலாளியாக இருந்தவர் முருகன்.
கிழக்கு கடற்கரை சாலையில் ரோந்து வரும் போலீசார் தினமும் ஏடிஎம்மை ஆய்வு செய்துவிட்டு புத்தகத்தில் கையெழுத்திட்டு செல்வார்கள். இன்று அதிகாலை 1.30 மணி அளவில் ரோந்து போலீசார் ஏடிஎம் மையத்துக்கு வந்தனர்.
ஆனால் ஏடிஎம் மெஷின் முன்பகுதி எரிக்கப்பட்டு இருந்து. பணம் வைக்கப்படும் பெட்டியும் உடைக்கப்பட்டு இருப்பது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு ஏடிஎம் காவலாளி இல்லை என்றதும் அவரை போலீசார் தேடினர்.
அப்போது ஏடிஎம் அருகே கழுத்து அறுக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் முருகன் இறந்துகிடந்தார். இதையடுத்து போலீசார், உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.