என் கணவர் உயிருக்கு ஆபத்து.. அட்டாக் பாண்டி மனைவி தயாள் பரபரப்பு குற்றச்சாட்டு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அட்டாக் பாண்டியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
மதுரை: மதுரை அரசு மருத்துவமனை சிறை வார்டில் சிகிச்சை பெற்றுவரும் அட்டாக் பாண்டியின் உயிருக்கு ஆபத்து. உள்ளதாக மனைவி தயாள் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நண்பர் பொட்டு சுரேஷ் 2013ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அட்டாக் பாண்டி மஞ்சள் காமாலை, நுரையீரல் தொற்று நோயினால் அவதிப்பட்டு வந்தார். அவரது உடல் நிலையை காரணம் காட்டி மேல்சிகிச்சைக்கு சிறை மருத்துவமனை நிர்வாகம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரைத்தது.
இதை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாளையங்கோட்டையிலிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அழைத்து வரப்பட்டார். அவரை பரிசோதித்த அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய கூறியதை தொடர்ந்து அவர் சிறை கைதிகள் சிகிச்சை பிரிவில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்படும் என தெரிகிறது
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அட்டாக் பாண்டியின் மனைவி தயாள், தனது கணவருக்கு அவசர அறுவை சிகிச்சை பற்றி முழுமையான தகவல் தரப்படவில்லை என்றும், அறுவை சிகிச்சை என்ற பெயரில் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் அட்டாக் பாண்டிக்கு சிறையில் மெல்ல கொல்லும் விஷம் கொடுத்து இருக்கலாம் என எங்களது மருத்துவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். எனவே அவசர அறுவை சிகிச்சை எதற்காக என்பதையும், சிகிச்சை முறை குறித்தும் உண்மையை தெரிவிக்க வேண்டும். மேலும் எங்களின் விருப்பத்திற்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.