ஒரு திருட்டு முயற்சி.. லாக்கப்பில் மரணம்.. பெட்ரோல் குண்டு வீச்சு.. படபடக்க வைக்கும் வீடியோ காட்சி!
சென்னை: சென்னையில் போலீஸ் நிலைய விசாரணையின்போது இறந்ததாக கூறப்படும் மீன் குழம்பு கார்த்திக்கின் மரணத்திற்கு முன்பு நடந்த படபடக்க வைக்க வைக்கும் நகைப் பறிப்பு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை துரைப்பாக்கத்தில் கடந்த 18ம் தேதி இரவு மென்பொறியாளர் சிநேகலதா என்பவரிடம் நகை, பணம் பறிக்க முயற்சி நடந்தது. இந்த சம்பவத்தின்போது அங்கு மிகப் பெரிய அளவில் சண்டை மூண்டது.
வழிப்பறி கொள்ளையர்களுடன் போராடி மளிகைக்கடைகாரர் சேகர் என்பவர் சிநேகலதாவைக் காப்பாற்றினார். இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக கண்ணகி நகர் போலீஸ் நிலையத்திற்குப் புகார் போய், அவர்கள் நடத்திய விசராணையில், சிந்தாரிப்பேட்டையை சேர்ந்த மீன் குழம்பு கார்த்திக், அவரது கூட்டாளி அருணாசலம் ஆகியோர் சிக்கினர்.
அவர்களிடம் போலீஸ் நிலையத்தில் வைத்து நடந்த விசாரணையின்போது கார்த்திக் மர்மமான முறையில் மரணணடைந்தார். இதையடுத்து அவரை கொலை செய்து விட்டதாக கார்த்திக்கின் உறவினர்கள் கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது நடந்த மோதலில் போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று சிநேகலதாவிடம் நடத்தப்பட்ட வழிப்பறி தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தெருவில் வைத்து நடந்த அந்த கொள்ளை முயற்சியும், அதைத் தடுக்கும் முயற்சிகளும் இதில் பதிவாகியுள்ளன. ஒரு வீட்டின் முன்பு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் இந்தக் காட்சிகள் பதிவாகியுள்ளன.