ஆடி கார் ஐஸ்வர்யா முதல் ஜெய் வரை... குடிபோதை கார் விபத்துகள்
Recommended Video

சென்னையில் குடி போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர். இதனால் உயிர் பயத்தில் உறைந்துள்ளனர் அப்பாவி பொதுமக்கள்
சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களிலும், கிழக்குக் கடற்கரைச்சாலைகளில் உள்ள ரிசார்ட்களிலும் வார விடுமுறை நாள் பார்ட்டிகள் அதிகம் நடைபெறுகின்றன.
இந்த பார்ட்டிகளில் பங்கேற்கும் பிரபலங்கள், வசதிபடைத்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த வாரிசுகள் குடித்து விட்டு போதையில் கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்துகின்றனர்.
தரமணியில் ஆடி கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா முதல், நடிகர் அருண் விஜய், போர்சே காரை குடிபோதையில் ஓட்டி வந்து டிரைவர் உயிரை பறித்த விகாஷ் வரை இப்போது ஜாமீனில் வெளியே சுற்றிக்கொண்டுள்ளனர். அதே நேரத்தில் விபத்தில் பலியானவர்களின் குடும்பம்தான் ஆதரவற்ற நிலையில் நிற்கிறது என்பதுதான் சோகம்.

ஆடி கார் ஐஸ்வர்யா
திருவான்மியூர் காமராஜர் நகரை சேர்ந்த முனுசாமி என்ற கார்பென்டர், அதிகாலை நேரத்தில் எஸ்.ஆர்.பி. டூல்ஸ் பஸ் நிறுத்தம் அருகே, சாலையை கடக்க முயன்றார். அப்போது, டைடல் பார்க்கில் இருந்து சோழிங்கநல்லூர் நோக்கிச்சென்ற கார், முனுசாமி மீது மோதியது. இந்த விபத்தில், முனுசாமி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

ஜாமீனில் விடுதலை
காரை ஓட்டிய ஐஸ்வர்யாவை, போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தோழிகள் இருவரையும், போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள். 40 நாட்கள் சிறையில் இருந்த ஐஸ்வர்யா பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அருண் விஜய்
பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடிகை ராதிகா சரத்குமார் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு போதையில் வீடு திரும்பிய போது விபத்தில் சிக்கினார்.

போலீஸ் வாகனம் சேதம்
நுங்கம்பாக்கம் காவல் நிலையம் முன்பாக நின்று கொண்டிருந்த போலீசாரின் வாகனத்தின் மீது மோதினார்.
இதில் அருண் விஜய்க்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றாலும் போலீசார் வாகனங்களை சேதம் செய்ததற்காக அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

கார் ரேஸ் வீரர் விகாஸ் ஆனந்த்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை ஆழ்வார்பேட்டையில் குடிபோதையில் கார் ஓட்டியபோது ஏற்பட்ட விபத்தில் ஆட்டோக்களின் மீது அவரது கார் ஏறியதில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் சிறைக்கு சென்ற கார் பந்தைய வீரர் விகாஸ் ஆனந்த் தற்போது ஜாமீனில் வெளிவந்து பந்தையங்களில் பங்கேற்று வருகிறார்.

நடிகர்கள் தப்பிவிடுகின்றனர்
போதையில் உலா வரும் நடிகர்களும், பிரபலங்களும் விபத்தை ஏற்படுத்தி விட்டு உடனடியாக ஜாமீனில் வெளிவந்து விடுகின்றனர். ஆனால் இவர்களினால் பாதிக்கப்பட்டவர்களின் நிலைதான் பரிதாபம். நடிகர் ஜெய் இதேபோல குடிபோதையில் காரை ஓட்டி வந்து விபத்தில் சிக்கினார் உடனடியாக அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அபராதம் எவ்வளவு
குடி போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10000 அபராதம் விதிக்கப்படும் என்கிறது மோட்டார் வாகன சட்டம். வாகன விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் 10 லட்சம் வரை இழப்பீடு தொகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அபராதங்களை அதிகரித்தால் மட்டுமே குடி போதையில் கார் ஓட்டுபவர்களை கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications