ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கு... நீதிபதி கேட்ட பல கேள்விகளுக்குப் பேசாமல் இருந்த ஜெயேந்திரர்
சென்னை: சென்னையில் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் இன்று கோர்ட்டில் நேரில் ஆஜரானார். அப்போது நீதிபதி ராஜமாணிக்கம் கேட்ட 82 கேள்விகளுக்கும் பெரும்பாலும் தெரியாது, ஞாபகம், பொய் என்று பதிலளித்தார் ஜெயேந்திரர். அவருடன் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 8 பேரும் கூட இன்று ஆஜராகியிருந்தார்கள்.
சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கடந்த 2002 ஆம் ஆண்டு தாக்கப்பட்டார். சங்கர மடத்தில் நடந்த முறைகேடுகளை வெளிப்படுத்தியதால் அவர் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இது தொடர்பாக ஜெயேந்திரர், விஜயேந்திரரின் தம்பி ரகு, சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யர், தாதா அப்பு (இப்போது இறந்து விட்டார்), காண்டிராக்டர் ரவி சுப்பிரமணியம் உள்பட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதில் ரவி சுப்பிரமணியம் அப்ரூவராக மாறிவிட்டார். எனவே, ஜெயேந்திரர் உள்பட 11 பேர் மீது மட்டும் சென்னை முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில், அப்பு கிருஷ்ணமூர்த்தி, கதிரவன் ஆகிய இருவர் உயிரிழந்துவிட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உள்பட வழக்கில் தொடர்புடைய 9 பேரும் வரும் 28ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். விசாரணைக்கு ஜெயேந்திரர் ஆஜராகும்போது அவரிடம் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

அதன்படி 9 பேரும் இன்று கோர்ட்டில் நேரில் ஆஜராகினர். ஜெயேந்திரர் ஆஜரானதைத் தொடர்ந்து கோர்ட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ஜெயேந்திரரிடம் நீதிபதி ராஜமாணிக்கம் 82 கேள்விகளைக் கேட்டார். இதற்கு பெரும்பாலும் தெரியாது, ஞாபகம் இல்லை, பொய் என்ற ரீதியில் பதிலளித்தார் ஜெயேந்திரர்.
சில கேள்விகளுக்குப் பதிலே பேசாமல் அமைதியாக இருந்தாராம் ஜெயேந்திரர். அப்போது நீதிபதி இல்லை என்று சொல்லுங்கள் அல்லது ஆம் என்று சொல்லுங்கள், ஏதாவது பேசுங்க என்றாராம். அந்த சமயத்தில் குறுக்கிட்ட அவரது வழக்கறிஞர்கள்,. சில நேரங்களில் அவருக்கு காது கேட்பதில்லை. எனவேதான் அமைதியாக இருக்கிறார் என்று விளக்கினராம்.
கடைசியாக இந்த வழக்கு குறித்து உங்களது கருத்து என்ன என்று நீிதிபதி கேட்டபோது டக்கென எல்லாமே பொய் என்று கூறினாராம் ஜெயேந்திரர். மற்றவர்களிடமும் நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications