இனப்படுகொலை.. அப்படிதான் சொல்லப்பட வேண்டும்! தமிழர்களுக்காக ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஒலித்த குரல்
சிட்னி: இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு தினம் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களால் 'முள்ளிவாய்க்கால் நினைவு நாளாகக்' கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹியூ மெக்டெர்மாட், தமிழ் இனப்படுகொலையை ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மிக வலுவாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஹியூ மெக்டெர்மாட் ஆற்றிய உரை சர்வதேச அரங்கில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. அதில் ஹியூ மெக்டெர்மாட் பேசுகையில், 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால், இவ்வளவு காலம் கடந்தும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. இலங்கையில் நிகழ்ந்த கொடூரங்களுக்கு இன்னும் யாரும் பொறுப்பேற்கவில்லை

போரின் போது 3 லட்சம் தமிழ் மக்கள் தங்களுக்கே உரிய அனைத்தையும் விட்டுவிட்டு, பாதுகாப்பான மண்டலம் என உறுதியளிக்கப்பட்ட இடங்களை நோக்கி தப்பி ஓடினர். ஆனால் அந்த பகுதிகளுக்குள் சிக்கிய பொதுமக்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் திட்டமிட்ட பீரங்கித் தாக்குதல்களையும், துப்பாக்கிச் சூடுகளையும் நடத்தியது.
இது ஒரு இனப்படுகொலை. அதனை அவ்வாறு மட்டுமே அங்கீகரிக்கப்பட வேண்டும். இதற்கு காரணமான இலங்கை அரசு மற்றும் இராணுவத்தில் உள்ள குற்றவாளிகள் பொறுப்பேற்க வைக்க வேண்டும். கனடா நாடாளுமன்றம் ஏற்கனவே தமிழ் இனப்படுகொலையைத் தீர்மானம் மூலம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. அதே பாதையை ஆஸ்திரேலிய நாடாளுமன்றமும் பின்பற்ற வேண்டும்.
ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றம் தமிழ் இனப்படுகொலையை முறைப்படி அங்கீகரிக்க வேண்டும். போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இலங்கை அரசியல் மற்றும் ராணுவத் தலைவர்கள் மீது சர்வதேசச் சட்டங்களின்படி சுதந்திரமான விசாரணை நடத்த ஆஸ்திரேலியா அழுத்தமளிக்க வேண்டும். ஈழத் தமிழர்களின் தாயகம், தேசியம் மற்றும் அவர்களின் உரிமையை ஆஸ்திரேலியா ஆதரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, 1951ல் கொண்டு வரப்பட்ட சிங்களா சட்டம், 1981ல் யாழ்ப்பாணம் நூலகம் எரிப்பு உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டிய அவர், தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்ட ஒரு பிரச்சாரம் உருவாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இவரின் உரை உலகெங்கும் உள்ள தமிழ் மக்களிடையே விவாதமாகி இருக்கிறது. ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் வலியைப் பதிவு செய்து, இனப்படுகொலைக்கு நீதி கோரிய எம்பி ஹியூ மெக்டெர்மாட்டிற்கு ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழ் சமூகத்தினர் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications