காரைக்குடி பள்ளியில் கோலாகல விருது விழா.. மாணவர்கள் கலக்கிய சைனீஸ் நடனம்.. கேரளா டான்ஸ்!
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியின் மூன்றாம் ஆண்டு விருது வழங்கும் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
எல்சிடிஎல் பழனியப்பச் செட்டியார் நினைவரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர். வி.பாலச்சந்திரன் தலைமையேற்றார்.
தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் ஏ மாரிமுத்து முன்னிலை வகித்தார். சென்னை டி.வி.எஸ். நிறுவனத்தின் பொதுமேலாளர் எம்.சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தலைமையாசிரியர் ஆ. பீட்டர் ராஜா அனைவரையும் வரவேற்றார். பட்டதாரி ஆசிரியர்கள் விஜயகாந்தி மற்றும் கோமதிஜெயம் ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர்.

சிறப்பு விருந்தினர்களின் வாழ்த்துகள்
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் முனைவர். சாமி. சத்தியமூர்த்தி, தேவகோட்டை ஸ்ரீசேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் முனைவர். ஆர். சந்திரமோகன், அழகப்பா பல்கலைக்கழக வரலாற்று துறைத் தலைவர் முனைவர். கிருஷ்ணமூர்த்தி, கல்வியியல் துறை பேராசிரியர் சரவணக்குமார், எஸ்எஸ்ஏ கல்லூரி முதல்வர் ஹேமமாலினி, பள்ளிக் கல்வித்துறை முன்னாள் துணை இயக்குநர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

விருது வழங்குதல்
விழாவில் 2015 -16ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள், சமூகவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்கள், வகுப்பில் சிறந்த மாணவர்கள், சிறந்த சாரண சாரணியர் மாணவர்கள், இளம் விஞ்ஞானி விருது போன்ற பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது.

ஆசிரியர்களுக்கும் விருதுகள்
2015 -16ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. விழாவில் கேரளா நடனம், சைனீஸ் நடனம், லொள்ளு சபா, மிமிக்ரி போன்ற மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தொகுத்து வழங்கிய மாணவர்கள்
மாணவர்களே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். இவ்விழாவில் தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள பல்வேறு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், காரைக்குடி அகரம் அரிமா சங்கம் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டுசிறப்பித்தனர்.

பெற்றோர்கள் - பொதுமக்கள்
பெற்றோர்கள், மற்றும் காரைக்குடி வாழ் பொது மக்கள் ஆகியோர் திரளாக வருகை தந்து விழாவை கண்டு களித்தனர். பட்டதாரி ஆசிரியர் மீனாட்சி நன்றியுரை கூறினார். பள்ளியின் ஆசிரியர்க நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications