கோபாலபுரம் போகாமல் போயஸ் தோட்டத்திலேயே தங்கிய அழகிரி... அப்போ திமுக எண்ட்ரீ?
சென்னை: தந்தையை சந்திக்க சென்னை வந்தும், கோபாலபுரம் செல்லாமல் போயஸ்தோட்டத்திலேயே அழகிரி தங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தன் நிபந்தனைகள் எதையும் நிறைவேற்றித் தர பெற்றோர் தயாராக இல்லாததால், தன் பிறந்த நாளுக்கு ஆசி வாங்காமல் அழகிரி தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது.
எந்த நேரத்தில் என்ன நடக்க வேண்டுமோ, அது சரியாக நடக்கும் என்ற நம்பிக்கை மட்டும் எனக்கு உள்ளது. கட்சித் தலைவர் கருணாநிதி மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அவரை சந்தித்தால் தான், எனக்கு ஆசிர்வாதம் கிடைக்கும் என்பதில்லை என்றும் தான் சந்திக்காமல் போனதற்கான காரணத்தைக் கூறியுள்ளார் அழகிரி.
இந்த ஆண்டு ஜனவரி 30ம் தேதி, அழகிரியின் பிறந்த நாள் மிக எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் அழகிரியின் ஆதரவாளர்கள், பிறந்தநாளை மிகச் சிறப்பாக கொண்டாடுவர். ஆனால் கடந்தாண்டு ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பால், ஆடம்பரத்துக்கு தடை போட்டுவிட்டார் அழகிரி. நலத்திட்ட உதவிகளை எளிமையாக வழங்கிமாறு, ஆதரவாளர்களை கேட்டுக் கொண்டார்.

சென்னை வந்த அழகிரி
இந்த ஆண்டு பிறந்த நாளில் மதுரையில் இருப்பதை தவிர்த்து விட்டு, இரண்டு நாட்களுக்கு முன்பாகவே சென்னை வந்து, போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது மகன் துரை தயாநிதி வீட்டில் தங்கியிருந்தார். கட்சியில் மீண்டும் இணைவதற்கு, கட்சித் தலைமைக்கு சில நிபந்தனைகளை அழகிரி விதித்திருந்தார்; அதை ஏற்பதில், தி.மு.க. தலைமைக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கோபாலபுரம் போகலையே
தன் கோரிக்கைகளை நிறைவேற்றாத காரணத்தால் தன் பிறந்த நாளில், பெற்றோர் கருணாநிதி - தயாளுவிடம் ஆசி வாங்க செல்வது குறித்து அழகிரி தயக்கம் காட்டினார். இறுதியில் எப்படியும் கோபாலபுரம் வந்து, பெற்றோரிடம் ஆசி பெறுவார் என, எல்லாரும் எதிர்பார்த்த நிலையில், கோபாலபுரம் செல்லாமல் அழகிரி தவிர்த்துவிட்டார்.

திமுகவில் மீண்டும் அழகிரி
பிறந்தநாளில் பெற்றோரை சந்திப்பார் என்றும் அழகிரி மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுவார் என்றும் கடந்த வாரங்களில் ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இதனால் அழகிரியின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியான செய்தியை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

சட்டசபை தேர்தலுக்குள் இணைவு
இந்த நிலையில் அழகிரியின் திமுக இணைவு நடக்காமல் போய்விட்டது அவரது ஆதரவாளர்களை சோர்வடையச் செய்துள்ளது. திமுகவில் அழகிரி இணைந்த உடன் மீண்டும் மதுரையை தெறிக்க விடலாம் என்று காத்திருந்தவர்கள் கவலையடைந்துள்ளனர். எப்படி இருந்தாலும், சட்டசபை தேர்தலுக்குள் அழகிரி மீண்டும் திமுகவில் இணைந்து விடுவார் என்று நம்புகின்றனர்.

யாரிடமும் கேட்கமாட்டேன்
பிறந்த நாளில் சென்னையில் தான் இருந்தேன். நான், யாரையும் சந்திக்கும் திட்டம் இல்லை; அதனால், யாரையும் சந்திக்கப் போகவில்லை. நான், திமுகவில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவது குறித்தெல்லாம் நான் யாரிடமும் எதுவும் கேட்கவில்லை என்று கூறியுள்ளார் அழகிரி.

அப்பாவின் ஆசிர்வாதம்
எந்த நேரத்தில் என்ன நடக்க வேண்டுமோ, அது சரியாக நடக்கும் என்ற நம்பிக்கை மட்டும் எனக்கு உள்ளது. கட்சித் தலைவர் கருணாநிதி மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அவரை சந்தித்தால் தான், எனக்கு ஆசிர்வாதம் கிடைக்கும் என்பதில்லை என்று கூறியுள்ளார் அழகிரி.












Click it and Unblock the Notifications