16ம் தேதி ஆதரவாளர்களைக் கூட்டுகிறார் அழகிரி -அதிரடி முடிவை அறிவிக்கிறார்?
மதுரை: பிரதமர் மன்மோகன் சிங், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோரை அடுத்தடுத்து சந்தித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, அடுத்து திடீரென தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை மதுரையில் கூட்டியுள்ளார்.
இதனால் திடீர் பரபரப்பு கூடியுள்ளது. அவர் என்ன நோக்கத்திற்காக ஆதரவாளர்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் என்பது குறித்து மற்றவர்களை விட திமுகவினர் அதிக பதைபதைப்புடன் எதிர்நோக்கியுள்ளனர்.
திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள அழகிரி ஆரம்பத்தில் அமைதியாக இருந்தார். தற்போது திடீரென அவர் முக்கியஸ்தர்களைச் சந்திக்க ஆரம்பித்திருக்கிறார். இதில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை என்று அவர் கூறி வருகிறார். ஆனால் திடீரென தற்போது தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை அவர் கூட்டியுள்ளதால் ஏதோ திட்டத்துடன் அழகிரி இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

நேற்றுதான் காலையில் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தார் அழகிரி. இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தெரிவித்தார் அழகிரி.
இந்த நிலையில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தைச் சந்தித்துப் பேசினார் அழகிரி. அவருடன் அவரது மகன் துரை தயாநிதியும் உடன் போயிருந்தார்.
இதையடுத்து வருகிற 16ம் தேதி மதுரையில் உள்ள தனக்குச் சொந்தமான தயா மஹாலில் ஆதரவாளர்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் அழகிரி. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டத்தில் பங்கேற்குமாறு ஆதரவாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு அழகிரி, தனது முடிவை பற்றி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் என்ன ஆலோசனை நடத்தப் போகிறார், என்ன முடிவை எடுக்கப் போகிறார், என்ன அறிவிக்கப் போகிறார் என்பது மற்றவர்களை விட திமுகவினர் மத்தியில், குறிப்பாக ஸ்டாலின் தரப்பினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications