அழகிரியை திமுகவுக்கு "மீட்டு கொண்டு" வர கனிமொழி முயற்சி?
சென்னை: திமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட மு.க. அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்ப்பதில் அவரது சகோதரியும் ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழி மும்முரம் காட்டுவதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலுக்கு முன்பே திமுக தலைமைக்கு எதிராக பல்வேறு கருத்துகளை அதிரடியாக தெரிவித்து வந்ததற்காக மு.க. அழகிரி கட்சியைவிட்டே டிஸ்மிஸ் செய்யப்பட்டார். லோக்சபா தேர்தல் முடிந்த பின்னரும் அழகிரியின் ஆதரவாளர்கள் சிலர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.
தற்போது திமுகவில் உட்கட்சித் தேர்தல் களை கட்டியிருக்கிறது. இந்த நிலையில் மு.க. அழகிரியை மீண்டும் திமுகவில் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் அவரது சகோதரி கனிமொழி இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
திருச்சியில் கனிமொழி
கடந்த 3-ந் தேதி திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவாவின் மனைவி தேவிகாராணி மறைவுக்கு கனிமொழி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் திருச்சியில் இருந்து கனிமொழி மதுரை சென்றதாகத் தெரிகிறது.
மதுரை விமானத்தில் அழகிரியுடன் ஆலோசனை
பின்னர் மதுரையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் திரும்பினார் கனிமொழி. அவர் வந்த விமானத்தில் மு.க. அழகிரியும் வந்ததாகவும் இருவரும் தீவிரமாக ஆலோசனை நடத்தியதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடும்ப ஒற்றுமை முக்கியம்- கனிமொழி
இந்த விமான பயண சந்திப்பின் போது கனிமொழி தரப்பில், குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதுதான் அப்பாவின் விருப்பம்.. அதனால் நீங்கள் மிக பொறுமையாக இருங்கள் என்று அழகிரியிடம் கனிமொழி கூறியிருக்கிறார்.
இதை ஏற்றுக் கொண்ட கனிமொழி, "நீர் அடித்து நீர் விலகாது; ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்று தொடர்ந்து அப்பா பேசுவதன் பின்னணியே நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது தான். நல்லது விரைவிலேயே நடக்கும்; அது வரையில் பொறுமையாக இருங்கள் என சொல்லியிருக்கிறார்.
கடுப்பில் ஸ்டாலின்
அழகிரி- கனிமொழியின் இந்த விமான சந்திப்பு விவகாரம்தான் திமுகவினரிடையே இப்போது முக்கிய விவாதம். இதனால் மு.க.ஸ்டாலினும் அவரது ஆதரவாளர்களும் கடுப்பின் உச்சத்தில் இருக்கிறார்கள் என்கிறது அறிவாலய வட்டாரங்கள்.