மதுரையைக் கலக்கிய அழகிரி ஆதரவாளர்கள்.. ஆயிரக்கணக்கில் கூடியதால் திமுக அதிர்ச்சி!
மதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக நேற்று மதுரைக்கு வந்தார். அப்போது வி்மான நிலையத்தில் அவருக்கு ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டு வந்து பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். இது திமுக தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாம்.
சென்னை விமான நிலையத்திலும் கூட அழகிரிக்கு பிரமாண்ட வழியனுப்பு நடந்ததும் திமுக தரப்பை விழி விரியச் செய்துள்ளது.
அழகிரி படு அமைதியாக இருப்பதால் அவர் எந்த மாதிரியாக வெடித்து வெளி வரப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும், படபடப்பும் திமுக வட்டாரத்தை நெளிய வைத்து வருகிறதாம்.
கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதற்காக
கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்குப் புறம்பாகவும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதற்காகவும் மு.க.அழகிரியை தற்காலிகமாக கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிக்கை மூலம் அறிவித்த பின்னர் நேற்று முதல் முறையாக மதுரைக்குச் சென்றார் அழகிரி.
சென்னையில் பிரமாண்ட வழியனுப்பு
இதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு அவரது ஆதரவாளர்கள் மேள தாளத்துடன் பிரமாண்டமான முறையில் வழியனுப்பு நடத்தினர்.
மதுரையில் திரண்ட ஆயிரக்கணக்கானோர்
அதேபோல மதுரைக்குப் போய்ச் சேர்ந்த அழகிரிக்கு, விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கில் திரண்ட ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கைகளை ஆட்டி.. புன்னகை பூத்து...
வழக்கமாக தன்னை வரவேற்பவர்களை அமைதியான முறையில்தான் எதிர்கொள்வார் அழகிரி. ஆனால் நேற்று முற்றிலும் வித்தியாசமாக, தன்னை வரவேற்க வந்திருந்தவர்களைப் பார்த்து அவர் புன்னகை தவழும் முகத்துடன் கைகளை ஆட்டியது ஆதரவாளர்களை மேலும் உற்சாகப்படுத்தியது. வாழ்த்து கோஷம் விண்ணைத் தொட்டது.
நன்றி...
பின்னர் வெளியே வந்த அழகிரியிடம் செய்தியாளர்கள் ஆதரவாளர்கள் இவ்வளவு பேர் குவிந்திருக்கிறார்களே என்று கேட்டபோது, அவர்களுக்கு என் நன்றிகள் என்று பதிலளித்தார் அழகிரி.
பிறந்த நாள் விழா நடைபெறும்...
தொடர்ந்து அவர் பேசுகையில், வழக்கம் போல் இந்த வருடமும் என் பிறந்தநாள் விழா நடைபெறும். வழக்கம்போலவே இந்த வருடமும், பிறந்த நாள் விழாவில், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பெறும் என்றார் அழகிரி.