ஆம்பூரில் டாஸ்மாக் போராட்டம் : பெண்களின் முடியை பிடித்து இழுத்துச் சென்ற போலீஸ் - வீடியோ
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அழிஞ்சிக்குப்பம் பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடிய மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
வேலூர்: ஆம்பூர் அருகே அழிஞ்சிக்குப்பம் பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடிய மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அழிஞ்சிக்குப்பம் குப்பம் பகுதியில் மதுக்கடைக்கு எதிராக போராடிய பெண்களை போலீசார் முடியைப் பிடித்து இழுத்து சென்றனர்.
ஆம்பூர் அடுத்த அழிஞ்சிகுப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் 2 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடக்கோரி பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மேல்பட்டி போலீஸார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையேற்காத பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு டாஸ்மாக் கடைக்கு முன்பாக போடப்பட்டிருந்த மேற்கூரையை பிரித்தெரிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிலர் கடையின் உள்ளே புகுந்து அங்கிருந்த மதுபாட்டில்களை நடுரோட்டில் தூக்கி வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுபாட்டில்களை வீசி போராட்டத்தில் ஈடுபட்ட ராஜக்கல், அழிஞ்சிகுப்பம், சங்கராபுரம் கிராமங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்களை போலீஸ் வேனில் ஏற்றினர்.
பேரணாம்பட்டு வட்டாட்சியர் வந்த அரசு வாகனம் மீது சிலர் கற்களை வீசி தாக்கினர். இதில், ஜீப் கண்ணாடிகள் உடைந்தது. அதேநேரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸார் வாகனங்கள் மீதும் சிலர் கல்வீச்சி தாக்குதலில் ஈடுபட்டனர்.
அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் போலீசார் வாகனங்களுக்கு தீ வைத்தனர். ரூ.2 லட்சம் மதிப்பிலான டாஸ்மாக் மதுபாட்டில்களை நடுரோட்டில வீசி ஏராளமானோர் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதால் அந்த இடமே போர்க்களமாக மாறியது.
உடனே, போலீசார் வேறு வழியின்றி தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பெண்களின் முடியை பிடித்து இழுத்தும், பெண்களின் மீது தாக்கியும் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.