போலி சர்டிபிகேட் சண்முகசுந்தரி பாமகவில் இல்லையா? அப்போ இது யாரு...?
சென்னை: போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்த வழக்கில் கடந்தவாரம் கைதான சண்முக சுந்தரி பாமகவில் எந்த பொறுப்பிலும் இல்லை என்று அவசரம் அவசரமாக அறிக்கை வெளியிட்டது பாட்டாளி மக்கள் கட்சி.
டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடனேயே வெளியிடப்பட்டது. ஆனால் சண்முக சுந்தரி பாமகவில் வழக்கறிஞர் பிரிவில் முக்கிய பொறுப்பு வகித்த தகவல் ஆதாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியினர் நடத்தும் கூட்டம் என்றாலே பளிச் என்று முன்வரிசையில் அமர்ந்து பங்கேற்றவர் சண்முகசுந்தரி. ஃபேஸ்புக், ட்விட்டரில் அது குறித்து அப்டேட் செய்துவிடுவார். அவரது அப்டேட்தான் இன்றைக்கு பாட்டாளி மக்கள் கட்சியில் அவர் வகித்த பதவி, பொறுப்புகளை அம்பலப்படுத்தியுள்ளது.
சண்முகசுந்தரியின் பூர்வீகம் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை. கடந்த 2004 ஆம் ஆண்டு திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜி.எஸ். குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். குமார், வன்னியர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார்.
இந்த தம்பதியினர் கோவையில் ஹைமார்க் எஜூகேசனல் என்ற நிறுவனத்தை தொடங்கி வீட்டில் இருந்தபடியே படித்து 6 மாதத்தில் பட்டம் பெறலாம் என்று விளம்பரம் செய்து பலரையும் கவர்ந்துள்ளனர். லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்டு சான்றிதழ்களையும் வழங்கியுள்ளனர்.

போலி பல்கலைக்கழகம்
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு போலி பல்கலைக்கழகத்துடன் தொடர்பு வைத்துக்கொண்டு இந்த தில்லாலங்கடி வேலையை அரங்கேற்றியுள்ளனர். அந்தப் பல்கலைக்கழகத்திற்கும் சண்முக சுந்தரிக்கும் தரகர் வேலை பார்த்தது சேலத்தைச் சேர்ந்த கணேஷ் பிரபு.

சிக்கி சின்னாபின்னமாகி
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த அருண்குமார், மதுரை அழகிரி, கார்த்திக்கேயன் ஆகியோர் வழக்கறிஞர் பதிவுக்காக சமீபத்தில் தமிழ்நாடு பார்கவுன்சிலை அணுகியிருக்கின்றனர். இந்த சான்றிதழ்களை பார்த்து சந்தேகப்பட்ட பார்கவுன்சில் நிர்வாகிகள் இது குறித்து தோண்ட ஆரம்பிக்கவே சிக்கிக்கொண்டது சண்முக சுந்தரி குரூப்.

பி.ஹெச்.டி பட்டம்
சண்முகசுந்தரி படித்தது வெறும் பி.சி.ஏதான். ஆனால் அவரோ தனது பெயருக்குப் பின்னால் எம்.சி.ஏ, எல்.எல்.பி., எம்.பில்., பி.ஹெச்.டி என மானாவாரியாக பட்டத்தை போட்டுக்கொண்டுள்ளார். இது அத்தனையும் போலியாக வாங்கியதுதானாம். அவரது கணவருக்கும் இப்படி போலி பட்டங்களை வாங்கியுள்ளார் சண்முகசுந்தரி.

பாமகவில் பொறுப்புகள்
சண்முகசுந்தரி கடந்த 2008ஆம் ஆண்டு கோவையில் பாமக மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு மாநாட்டை தலைமையேற்று நடத்தியிருக்கிறார். அதில் சிறப்பு விருந்தினர்களாக ஜி.கே.மணியும், டாக்டர் ராமதாசும் பங்கேற்றுள்ளனர்.

சேலம் மாநாடு
கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற பாமக மாநாட்டில் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்துள்ள சண்முகசுந்தரி, மாநில மகளிரணி, வழக்கறிஞர் அணி என்றே தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.

மகள்கள் பிறந்தநாள்
பிப்ரவரி 16ஆம் தேதி சண்முகசுந்தரியின் மகள்கள் பிறந்தநாளுக்கு ராமதாஸ் நேரடியாக சென்று வாழ்த்து கூறியுள்ளார். அந்த படங்களும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

டாக்டர் ராமதாஸ் நியமனம்
கடந்த மார்ச் 14ஆம் தேதி சண்முகசுந்தரியை வழக்கறிஞர் மகளிர் பிரிவுக்கு நியமித்து அறிவித்துள்ளது பாட்டாளி மக்கள் கட்சி. காடுவெட்டி குரு, டாக்டர் அன்புமணி ராமதாஸ் உடன் குடும்ப சகிதமாக எத்தனையோ புகைப்படங்களை எடுத்து பதிவிட்டுள்ளார் சண்முக சுந்தரி.

கட்சியிலேயே இல்லை என்பதா?
கடந்த மாதம் வரை பாமகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ள சண்முகசுந்தரியை தங்களின் கட்சியிலேயே இல்லை என்று டாக்டர் ராமதாஸ் ஐயா ஒப்புதலோடு அறிவித்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர் அரசியல் கட்சியினர்.












Click it and Unblock the Notifications