மவுலிவாக்கம்: கட்டிட இடிபாடுகளில் துர்நாற்றம் – தொற்று நோய் பீதியில் மக்கள்
சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளதால் பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
சென்னை போரூர் அருகே மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் அருகில் உள்ள 11 மாடி கட்டிடத்தில் தங்கி வேலை செய்து வந்த ஆந்திரா மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் இடிந்த கட்டிடத்திற்கு அருகில் உள்ள அரசுப்பள்ளியில் உள்ள வகுப்பறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அந்த பள்ளிக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்கி உள்ளவர்களுக்கு உணவு, உடைகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது.
கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து எற்பட்ட இடத்தில் மீட்பு பணிகள் 3வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. அவ்வப்போது மழையும் பெய்து வருவதால் மீட்பு பணியில் சற்று சிக்கல் ஏற்பட்டது. மேலும் அப்பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி உள்ளது.
இதையடுத்து தாம்பரம், முடிச்சூர், மாங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து துப்புரவு தொழிலாளர்கள் 300 க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டு, மழைநீர் தேங்கிய இடங்களில் பிளீச்சிங் பவுடர், கொசு மருந்துகள் உள்ளிட்டவை அடித்த வண்ணம் உள்ளனர்.
மேலும் இடிபாடுகளை மீட்கும் இடத்தில் சற்று துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளதால் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் முகத்தில் கவசம் அணிந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தொற்று நோய் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.