என்ன உணவை யார் சாப்பிட வேண்டும் என முடிவெடுக்க மோடியும் அமித்ஷாவும் யார்? திருநாவுக்கரசர் சுளீர்
இந்தியாவில் யார் என்ன உணவை சாப்பிட வேண்டும் என்று மோடியும் அமித்ஷாவும் முடிவெடுக்க முடியாது என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னை: மாடுகள் மற்றும் ஒட்டகம் ஆகியவற்றை வெட்ட மத்திய அரசு திடீர் தடை விதித்துள்ளது. இதற்கு கடும் கண்டனத்தை தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 53வது நினைவு நாளான இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா முழுவதும் அணைக்கட்டுக்களையும், பல்வேறு தொழிற்சாலைகளையும் உருவாக்கியவர் நேரு. ஒப்பற்றத் தலைவரான அவரால் இந்தியா எழுச்சி பெற்றுள்ளது.

காற்றில் போன வாக்குறுதி
இந்தியாவில் ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு ஏற்படுத்தி தருவதாக மோடி கூறினார். சுவிஸ் வங்கியில் உள்ள கருப்புப் பணத்தைக் கொண்டு வந்து பொதுமக்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்துவேன் என்று உறுதி அளித்தார். எல்லாம் என்ன ஆயிற்று?

முடிவெடுக்க மோடி யார்?
வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சனை என பல பிரச்சனைகள் இருக்க, இந்தித் திணிப்பு, பொது சிவில் திட்டம், மாட்டிறைச்சி என்று மக்கள் விரோத செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். யார் என்ன சாப்பிட வேண்டும் என்று அவரவர்தான் முடிவெடுக்க வேண்டும். மோடியும் அமித்ஷாவும் முடிவு செய்ய முடியாது.

விரைவில் தேர்தல்
தேவையில்லாத விஷயத்தில் மத்திய அரசு தலையிடுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற நடவடிக்கையால் மோடி அரசு மக்களின் செல்வாக்கை இழக்கும். தேர்தல் எப்போது வரும் என்று மக்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். மோடி விரைவில் அகற்றப்படுவார்.

கண்டனம்
இஸ்லாமியர்கள் மற்றும் சாதாரண மக்கள் சாப்பிடும் உணவு மாட்டிறைச்சி. அது மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி அதிக அளவில் நடைபெறுகிறது. இதனை தடுக்கும் வகையில் கொண்டு வந்துள்ள சட்டம் கண்டனத்திற்குரியது என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications