கேரள வழியில் தமிழகத்திலும் மது விலக்கு கொண்டு வர வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: மதுவிலக்கை நோக்கிய விரைவான பயணத்தில் உள்ளதால் கேரளாவில் குற்றங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. எனவே, கேரளாவின் வழியைப் பின்பற்றி தமிழகத்திலும் படிப்படியாகவோ அல்லது ஒரே கட்டமாகவோ மதுவிலக்கைக் கொண்டு வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மதுவிலக்கை நோக்கி...
அண்டை மாநிலமான கேரளம் முழு மது விலக்கை நோக்கி விரைவான பயணத்தைத் தொடங்கியுள்ளது. கேரள மாநிலத்தில் 383 மதுக்கடைகளும், 752 பார்களும் செயல்பட்டு வந்தன. அவற்றில் 418 பார்களை கேரள அரசு அதிரடியாக மூடியது. அதன் பின்னர் மேலும் 18 பார்களும், 45 மதுக்கடைகளும் படிப்படியாக மூடப்பட்டன.

கேரள அரசின் நோக்கம்...
இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என்றும், வெகுவிரைவில் முழு மதுவிலக்கை ஏற்படுத்துவது தான் உம்மன்சாண்டி தலைமையிலான கேரள அரசின் நோக்கம் என்றும் கேரள மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் வி.எம்.சுதீரன் தெரிவித்துள்ளார்.

பாராட்டத்தக்கது...
2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக கேரளத்தில் முழு மதுவிலக்கு ஏற்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. மக்களைக் காப்பதற்கான கேரள அரசின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது.

கை மேல் பலன்...
கேரளத்தில் மதுக்கடைகளும், குடிப்பகங்களும் மூடப்பட்டதற்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 418 பார்கள் மூடப்பட்ட பிறகு குற்றச்செயல்கள் 15 விழுக்காடும், சாலை விபத்துக்கள் 10 விழுக்காடும் குறைந்திருப்பதாக கேரள குற்ற ஆவணக் காப்பகம் கூறியுள்ளது.

புள்ளி விவரங்கள்...
அதுமட்டுமின்றி, குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குடும்ப வன்முறைகள் ஆகியவையும் குறைந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆரோக்கியமான சூழ்நிலை...
மொத்தத்தில் மதுவுக்கு எதிராக கேரள அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் அம்மாநிலத்தில் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான சமுதாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

உயிரிழப்புகள்...
ஆனால், தமிழ்நாட்டில் மதுப்பழக்கத்தால் ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழக்கிறார்கள். குடிப்பழத்தால் ஏற்படும் சமூக, மருத்துவக் கேடுகளை சரிசெய்ய ரூ.40 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக செலவாகிறது என்று சுகாதார ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசுக்கு கோரிக்கை...
மது விற்பனை குறித்த தமிழக அரசின் அணுகுமுறை உயர்நீதிமன்றத்தில் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை அனைத்து தளங்களிலும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. எனவே, இனியும் மது விற்பனை மூலம் வருவாய் ஈட்டுவதை மட்டுமே நோக்கமாக கொள்ளாமல், மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு கேரளம் காட்டும் வழியில் படிப்படியாகவோ அல்லது ஒரே கட்டத்திலோ தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்' என இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications