பெங்களூர் ஏ.டி.எம். தாக்குதல் போல சென்னையில் பெண்ணை தாக்கி நகை, பணம் கொள்ளை
சென்னை: பெங்களூர் ஏ.டி.எம். மையத தாக்குதல் பாணியில் சென்னையிலும் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
சென்னை ஆலந்தூரில் காஞ்சீபுரம் கோஆபரேட்டிவ் சொசைட்டி நடத்தும் பொது வினியோக திட்டக் கடை ஒன்றில் வேலை பார்ப்பவர் கோமதி(38). அவர் நேற்று அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றுவிட்டு வந்து கடையில் தனியாக இருந்துள்ளார். அப்போது மாலை 4.30 மணி அளவில் அந்த கடைக்கு வந்த 2 மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து ஷட்டரை மூடியுள்ளனர்.
ஒருவர் கோமதியை கத்தியைக் காட்டி மிரட்ட மற்றொருவர் அவரை பிடித்துக் கொண்டார். மேலும் சத்தம் போட்டால் அவ்வளவு தான் என்று மிரட்டியுள்ளனர். கத்தி வைத்திருந்த நபர் கோமதியிடம் அவர் அணிந்திருக்கும் தங்க கம்மல் மற்றும் செயினை கழற்றித் தருமாறு கேட்டுள்ளார். அவரும் தனது 8 பவுன் தங்க நகைகளை அவர்களிடம் கொடுத்துள்ளார்.

நகையைப் பெற்றுக் கொண்ட அந்த நபர் கோமதியை கத்தியால் குத்திக் கிழித்துவிட்டு கடையில் இருந்த ரூ.15,000 ரொக்கத்தை எடுத்துக் கொண்டார். இந்த தாக்குதலில் கோமதி மயக்கம் அடைந்ததும் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
ஒரு மணிநேரம் கழித்து கண் விழித்த கோமதி தான் கடைக்குள் வைத்து பூட்டப்பட்டிருப்பதை உணர்ந்தார். உடனே அவர் தனது முதலாளிக்கு போன் செய்தார். அவர் வந்து கோமதியை கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் அவர் வேறு ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த கடையில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை பார்க்கும் கோமதியால் தன்னை தாக்கியவர்கள் பற்றி நினைவுபடுத்தி பெரிதாக ஒன்றும் தெரிவிக்க முடியவில்லை. கோமதியை தாக்கிய இருவரும் அந்த பகுதியில் நோட்டமிட்டு இந்த செயலை செய்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications