சென்னையில் ஏ.டி.எம்.முக்கு பணம் கொண்டு செல்லும் வாகனத்தை கடத்தி ரூ.15 லட்சம் கொள்ளை
சென்னை: சென்னை மண்ணடியில் ஏ.டி.எம். ஒன்றில் பணம் நிரப்புவதற்காக ரூ.37 லட்சம் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தை கடத்தி அதிலிருந்து ரூ.15 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, மண்ணடியில் ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்புவதற்காக ஒரு வாகனத்தில் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலருடன் பணம் கொண்டுசெல்லப்பட்டது.
வடக்கு கடற்கரை காவல் நிலையம் அருகே சென்றபோது வேனை மர்ம நபர்கள் வழி மறித்தனர். பின்னர் வேனில் பாதுகாப்புக்கு சென்ற காவலாளியை தாக்கிவிட்டு பணத்துடன் வேனைக் கடத்திச் சென்று விட்டனர்.
இதையடுத்து போலீசார் மேற்கொண்ட சோதனையில் அந்த வாகனம் ராயபுரத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்தது. இதையடுத்து வாகனத்தை கைப்பற்றி போலீசார் சோதனை செய்தனர். அப்போது பணம் வைக்கப்பட்டிருந்த இரண்டு பெட்டிகளை உடைத்து ரூ.15 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது. கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வாகனத்தில் கொள்ளை அடிக்கப்பட்ட பணம் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு சொந்தமான பணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வாகனத்தின் ஓட்டுநர் நாராயணன், பாதுகாவலர் சுரேந்தினிடம் வடக்கு கடற்கரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.