நோ டென்ஷன் மக்களே... 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கிகளில் கூடுதல் கவுண்டர்கள்!
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள வங்கிகளில் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மக்கள் சவுகரியமான வகையில் தங்களது பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்காக வங்கிகளில் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் கூடுதல் நேரத்திலும் வங்கிகள் பணியாற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்து விட்டது. மக்கள் தங்களிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மக்களிடையே நிச்சயம் பெரும் குழப்பமும் பீதியும் ஏற்படும் என்பதை உணர்ந்துள்ள மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் மும்பையிலும், டெல்லியிலும் கட்டுப்பாட்டு அறைகளை அமைத்துள்ளது.
இன்று நாடு முழுவதும் வங்கிகள் செயல்படாது. நாளை முதல் வங்கிகளில் மக்கள் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். மக்களின் வசதிக்காக வங்கிகள் கூடுதல் நேரத்தில் செயல்படும். மேலும் கூடுதல் கவுண்டர்களும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.