கொலை செய்ய தூண்டிய பானுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்க விஜயன் மனைவி சுதா வலியுறுத்தல்!
கணவர் விஜயனை கொலை செய்யத் தூண்டியது பானுதான் என்றும் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்றும் அவரது மனைவி சுதா வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: எம்.ஜி.ஆர். உறவினர் விஜயன் கொலை வழக்கில் பானு உட்பட 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதற்கு விஜயன் மனைவி சுதா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா. இவரது கணவர் விஜயன் என்ற எம்.ஜி.ஆர். விஜயன். இவர், 2008ம் ஆண்டு ஜூன் மாதம் 4ம் தேதி இரவு காரில் கோட்டூர்புரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஒரு மர்ம கும்பல் காரை வழிமறித்து விஜயனை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்தது.
இந்த கொலை வழக்கில் விஜயனின் மனைவி சுதாவின் சகோதரி பானு உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். சொத்து தகராறில் நடந்த கொலையில் 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

மேல்முறையீடு
பானு உட்பட 7 பேரும் ஆயுள் தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று வெளியானது.

விடுதலை
இதில் சுதாவின் சகோதரி பானு, கார்த்திக் ஆகிய 2 பேரும் விடுதலை செய்ய்யப்பட்டனர். மேலும் 5 பேருக்கு ஆயுள் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது.

அதிருப்தி
இந்த தீர்ப்பினால் விஜயனின் மனைவி சுதா கடும் அதிருப்தி அடைந்துள்ளார். கொலை செய்யத் தூண்டியது பானுதான் என்றும் அவருக்கு கண்டிப்பாக ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்றும் சுதா ஆவேசமாக கூறினார்.

மேல்முறையீடு
மேலும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் சுதா கூறியுள்ளார். நீண்ட நாட்கள் விசாரணையில் இருந்த இந்த வழக்கில் சுதாவிற்கு சாதகமாக தீர்ப்பு இருக்கும் என்ற நிலையில் இருவர் விடுதலை செய்யப்பட்டிருப்பது சுதா தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்கே நகர் வேட்பாளர்
இந்த சுதா விஜயன்தான் அதிமுக சசிகலா கோஷ்டியின் ஆர்கே நகர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட இருந்தவர். ஆனால் திடீரென தினகரன் தம்மையே வேட்பாளராக அறிவித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications