மாந்தோப்பில் புகுந்த கரடியை பிடிக்க வனத்துறையினர் பல மணிநேரம் போராட்டம்
நெல்லை: நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடியை விரட்ட வனத்துறையினர் பல மணிநேரமாக தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் அம்பா சமுத்திரத்தில் உள்ளது மணிமுத்தாறு அணை. இங்குள்ள வனத்துறை அலுவலகம் அருகே உள்ள மீன்பண்ணை ஒன்றில் நேற்று முன்தினம் கரடி ஒன்றை ஊர்மக்கள் பார்த்துள்ளனர். இதனால் பீதியடைந்த ஊர்மக்கள் திரண்டு கரடியை தேடியபோது கரடி அங்குள்ள மாந்தோப்பின் மரத்தின் மீது அமர்ந்திருப்பதை கண்டனர். உடனடியாக இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த 15 பேர் கொண்ட வனத்துறையினர் கரடியை விரட்ட முயற்சி மேற்கொண்டனர். ஆனால் கரடி மரத்திற்கு மரம் தாவியதால் அதை விரட்ட முடியாமல் வனத்துறையினர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து தீப்பந்தம் ஏந்தியும் டயரை கொளுத்தியும் மரத்தின் மீது தண்ணீரை பீய்ச்சியும் அடித்தனர்.
மரத்தின் கீழ் நெருப்பை மூட்டினார். 7 மணிநேரத்திற்கு மேலாக கரடியை விரட்டும் எந்த முயற்சியும் எடுபடவில்லை. இதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதுவரை மணிமுத்தாறு ஊருக்குள் 3 முறை கரடி புகுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications