பெண்களை இழிவுபடுத்துதல், அவமானப்படுத்துதல் உட்பட 3 பிரிவுகளில் சிம்பு, அனிருத் மீது வழக்குப்பதிவு
சென்னை: சிம்பு, அனிருத் கூட்டணியில் வெளியான பீப் பாடலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற பெண்களின் கோரிக்கையை ஏற்ற கோவை போலீசார் சிம்பு, அனிருத் மீது நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.
கடந்த 10 ம் தேதி அனிருத் இசையில் சிம்பு பாடிய பீப் பாடல் ஒன்று இணையதளங்களில் வெளியானது. இப்பாடலைக் கேட்ட மக்கள் பாடலில் உபயோகப்படுத்திய வார்த்தைகளைக் கண்டு மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

அந்த அளவிற்கு மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்த பாடல் உருவாக்கப்பட்டிருந்தது. பலர் இந்த விவகாரத்தில் சிம்பு, அனிருத்தை திட்ட சிலர் ஆதரவு கொடுக்க இணையமே கலவர பூமியாக காட்சியளித்தது.
மேலும் இந்தப் பாடலைக் கண்டித்து கோவையில் மகளிர் அமைப்புகள் போராட்டம் நடத்தி சிம்பு, அனிருத் இருவரின் புகைப்படங்களையும் கிழித்து எறிந்தனர்.
மேலும் கோவை மாவட்ட இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், சிம்பு மற்றும் அனிருத் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜிடம் மனு அளித்தனர். இதை புகார் மனுவை பெற்று கொண்ட மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ், வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.
மாநகர காவல் ஆணையாளர் உத்தரவைத் தொடர்ந்து கோவை ரேஸ் கோர்ஸ் போலீசார் சிம்பு, அனிருத் இருவர் மீதும் பெண்களை அவமானப்படுத்துதல், இழிவுபடுத்துதல் மற்றும் இணையத்தில் ஏற்றுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த 3 பிரிவுகளும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications