சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம்: ஜெ. அறிவிப்பு
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுவை தாக்கல் செய்யலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டசபைக்கு இந்தாண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. யார் எந்த கட்சியுடன் கூட்டணி சேர உள்ளார். மொத்தம் எத்தனை அணிகள் அமைய உள்ளன என்பன உள்ளிட்ட விவரங்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை இருந்த போதிலும் ஆளும் கட்சி இப்போதே தேர்தல் பணிகளில் வேகம் காட்டத் துவங்கிவிட்டது.

அதன்படி எம்.ஜி.ஆர் பிறந்த நாளையொட்டி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஜெயலலிதா, தேர்தல் பணிகளை உடனே தொடங்கும்படி வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில், தற்போது தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ஜனவரி 20ம் தேதி முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை தலைமைக் கழகத்தில் உரிய கட்டணம் செலுத்தி விருப்ப மனு அளிக்கலாம் என்று கூறியுள்ளார்.
தினமும் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரையில் விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பமனு கட்டணமாக 11000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுவைக்கு 5000 ரூபாயும், கேரளாவிற்கு 2000 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும்.












Click it and Unblock the Notifications